Sunday 28 August 2016

தனிமை நடக்கும் தன்னந் தனியே..

தனியே இருந்து பழகப் பழக
இனிமை அதிலே துளிர்க்கும்
ஓர்நாள்
இணைவோமென்று யார் வந்தாலும்
இடையில் தயக்கம் தடுக்கும்

என்னோடுள்ளே பேசிப் பேசி
என்னோடுள்ளே இன்பம் துய்த்து
என்னோடுள்ளே சிரித்து, அழுது
எனக்குள் நானே பொங்கித் தணிந்து
எனக்கோர் உலகை நானே வரைந்து
என்னை நடக்கப் பழக்கி அதிலே
எனக்கு நானே உறவு, குடும்பம்
என்றோர் மனதை அடைந்தேன்

இடையில்
எனக்கும் சாய ஓர் தோள் வேண்டும்
எந்தன் தலையை மடியில் கிடத்தி
பிடரி வருடும் விரலும், குரலும்
இருந்தாலென்று எண்ணம் தோன்றும்
அதுவும் பின்னர் மேகம் போல
வடிவம் மாறிக் கரையும், மறையும்

முடிவில்
பட்டுத் தெளித்த பதத்தை அடைந்து
கிட்ட நெருங்க யார் வந்தாலும்
விட்டிடைவெளியில் இவர்களும் என்னை
தட்டி வீழ்த்தி ரசிப்பரென்றச்சம்
எட்டத் தள்ளியே நிறுத்தும்,
போதை
உற்றுப் பழகி மகிழ்ந்தவன் அதனை
விட்டுச் செல்ல விரும்பானென்பதாய்
தனிமைப் போதை இன்பம் மாந்தி
இனிமை அதனுள் எய்தி, பழகி
இனிமேல் வாழ்க்கை இதுவென்றறிந்து
தனிமை நடக்கும் தன்னந் தனியே..