Monday 24 December 2012

பிரிவெனும் கருந்துளை..



பிரிவு பிளந்தென்னை
விழுங்கிற்று
ஏதோ ஓர் யுகத்தில்
கண்டங்கள் பிளந்து
தேசங்களை விழுங்கியதைப் போல

இருளும்,குளிரும் அடர்ந்த
இரவுக் கனவுகளின்
மன அழுத்த நெரித்தலில்
உடல் வியர்த்து, வான் தேடி
பிரமையில்
மல்லாந்து கிடக்கின்ற மலைக்கு
ஆறுதலாய் ஒருகாலை விடிவது போல
பிரிவின் அதீத அமுக்கத்தில்
பேதலித்துக் கிடக்கும் மனசு
நீண்ட பாலைவனப் பயணத்தின்
இடைவெளியில்
கொஞ்சம் குளிர் நீரும்
நிழல் மரமும் வேண்டுவதாய்
அன்பான வார்த்தை ஒன்றுக்காய்
அல்லாடி தவம் கிடக்கிறது

வழித்தடைகளாய் நின்று பிரிகின்ற
மலைகளாலும், கடல்களாலும்
மனிதர்களால் போடப்பட்டிருக்கும்
எல்லைகளாலும்
மூட்டப்பட்டிருக்கும் பிரிவுத் தீ
கால நீட்சி எனும் காற்று
வீசி அடிக்க
மூசி மூண்டெரிகிறது

வெப்பம் தாளாமல்
மன என்பின் மச்சை
கருகத் தொடங்கி விட்ட
காலமிது
மழைலையின் சிரிப்பும்
அன்றணைத்த அன்பின் கணப்பும் தான்
உருகும் என்பின் உஷ்ணத்தில்
மூச்சுத் திணறி
தள்ளாடி வீழ்ந்து விடாமல்
தாங்கிப் பிடிக்கிறது உயிரை

எப்போதோ பெய்த மழையின்
ஈரத்தை இழுத்துவைத்துக் கொண்டு
அடுத்த மழைக்காலம் வரை
உயிரேந்தும் கற்றாளை போல
பழகிய அன்பின் நினைவுகளை
அடித்தொண்டையில் வைத்துக் கொண்டு
கம்மும் குரலை
செருமியபடி காத்திருக்கிறது
கன மனசு..

Wednesday 28 November 2012

நினைவில் வைத்திருங்கள்..


கானகத்தின் மூச்சாய்
கடலலையின் அசைவுகளாய்
மானம் எனும் உயிரின்
மார்பாய், எம்தேச
வானத்தின் கீழ் நிற்கும்
வளியாய், வரலாறாய்
ஊனுடம்பின் ஆசைதனை
உதறி எம் மண்ணில்
மானுடம் வாழ்ந்ததென
மார்தட்டிச் சொல்ல வைத்த
எமதிருப்பின் சுவடுகளே!
எமக்காக உம் வாழ்வை
அமரத்துவமடைய வைத்த
ஆற்றல்மிகு நல்லுயிர்காள்!

தீபமாய் ஒளிருமும்
தியாகத்தின் வெளிச்சத்தில்
தாபமாய் எமக்குள்ளே
தகிக்கின்ற மண்காதல்
கலங்கரை விளக்கம் போல்
கட்பார்வைத் தூரத்தில்
துலங்குகின்ற விடுதலைக்கு
துயர் தாங்கி நடக்கிறது

இந்தக் கடல், காடு
எம்முடைய வயல்வெளிகள்
முந்தையொரு நாளிலெம்
முதுசமெனச் சொல்லும் நிலை
வந்ததெண்ண நெஞ்சின்
வயிறு பற்றி எரிந்தாலும்
சந்ததிகள் நிமிர்ந்தென்றோ
சரித்திரத்தைப் படிக்கையிலே
வந்த வழி அறிந்துங்கள்
வழியூடு நடந்து செல்ல
விந்தை நிகழ்ந்தொருநாள்
விடியும், சீக்கிரமாய்
எந்தை நிலம் எமதாகும்
என்கின்ற வாக்கினை நாம்
இந்தத் திரு நாளில்
ஏற்றுகிறோம் உம் முன்னே

கட்டிளம்வயதை காதலை உங்களின்
இட்டம் மிகுந்த வாழ்க்கையை - விட்டு நீர்
எமைக்காத்தீர் இங்கெப்படியும் நாமெழுந்து
அமைப்போமும் தேசத்தை ஆம்

சிரிக்கப் பழகுதல்..


வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்
காய்த்திருக்கும் விடுதலைப் பூ
கனியாகும் நாட்களிடை
எழுகின்ற அழுத்தங்கள்
எமைக் கொல்லும்,அக்கணத்தில்
அழுதிருப்போம் ஆனாலும்
அடுத்த நொடி சுதாகரித்து
நாமே எமைத்தாங்கி நடந்து செல்வோம்
இடைவெளியில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய் விட்டுச் சிரிக்கின்றோம்

அயர்லாந்தைத் தழுவுகின்ற
அட்லாண்டிக் கடற்கரையின்
உயரத்தில்  குருசுருவாய்
உடல் மின்னிக் கொண்டிருக்கும்
விண்மீன்களென் கண்ணில்
விழுந்தால், ஊர் வளவில்
நண்பர்கள் சேர்ந்திருந்து
நாமறிந்த கோளறிவை
அண்ணாந்து பார்த்தெமக்குள்
அடையாளம் காட்டியது
ஆண்டுகளைக் கண்டத்தை
அறித்தெறிந்து நிழலாட
கண்கலங்கும்,மறுநிமிடம்
கடைவாயில் சிரிப்பூரும்
என்னினத்தின் விதியிது தான்
என்கின்ற பெரு மூச்சில்
அக்கணமும் அறுந்து விழ
அடுத்த கணம் உருவாகும்
இக்கணம் மட்டுமே
இங்குண்மை என்கின்ற
நிமிடம்வரை நீளும்
நிலையாத தெளிவொன்றில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்

உயிரின் செவிக்கரையை
உதட்டாலே கவ்வுகின்ற
மயிர் குத்திட்டெழுந்து நிற்கும்
மண் பாட்டில்,

கடலுதட்டை
தொடுவான் கடிக்கின்ற
தொலைவில் படகொன்று
கடைசி ரெத்தச் சூரியனைக்
கடக்கின்ற பேரழகில்,

பலலெட்சம் மைல் கடந்து
பறந்து திரும்பித்தன்
நிலத்துக்கே வந்துவிட்ட
நிம்மதியில் பறவையதன்
கூட்டத்தோ டிசைக்கின்ற
குதூகலப் பாட்டுகளில்,

பாசாங்கறியாத
பால்வாயின் சிரிப்பதனில்

எம்மையறியாமலேயே
எமை மறந்து நாம் சிரிப்போம்
சிரிக்கும் போதூரின்
சில காட்சி வந்து விட்டால்
அரைச் சிரிப்போடெம் வாய்
அணையும், ஆனாலும்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்..

Monday 12 November 2012

நிலவாய் தொடர்கிறதென் நிலம்..


அடிக்கின்ற புயல் நடுவே
ஆடுகின்ற மரத்தினது
உடைகின்ற கொப்பாக
ஓர் வாழ்வு, கள்ளடியில்
அடைகின்ற மண்டியைப் போல்
அதிற் தனிமை, ஆனாலும்
விடிவெய்தும் என் தேச
விடுதலையின் எழுகதிரை
கையிரெண்டும் அகட்டி
கால் மடக்கித் தாளிட்டு
மெய் சிலிர்க்க நாடியினை
மேற் தூக்கி அண்ணாந்து
அப்படியே கண்ணால்
அதை நுகர்ந்து பருகியெந்தன்
இப்பிறப்பைத் துறக்கோணும்
என்பதொன்றே தீராத
ஆசையடி எந்தனுக்கு
அதற்குள்ளே என் வாழ்வு
ஓசையின்றி எங்கேனும்
ஓர் கண்டத் தகட்டிடுக்கில்
ஒடிந்து வீழ்ந்துடைந்து
உரு மறைந்து போயிடலாம்

எங்கெங்கோ நானோடி
இழுபட்டுத் திரிந்தாலும்
அங்கங்கெல்லாம் என்
அழகு மண்ணின் விடுதலையை
எங்ஙனம் நானெட்டுவேன் என்பதே
என் கனா மூச்சு எல்லாமும், அடிக்கடி
வாழுகின்ற இடம் வேறாய்
இருந்தாலும் பாதைகளாய்
நீளுகின்ற வழியெல்லாம்
நிறைந்திருப்பதென் மண்ணே

மாழுகின்ற போதிலுமென்
மனதாய் நினைவாக
சூழ்ந்தெங்கும் மண் மணமே
சுற்றி வரும், ஆதலினால்
எங்கே நான் வீழ்ந்தாலும்
என் மண்ணில் தான் வீழ்வேன்
அங்கே தான் உரமாவேன் அறி..

Monday 22 October 2012

நீயில்லாத மழைக்காலம்..


கண்ணைத் திறந்திருந்தால்
காணாத காட்சி எல்லாம்
கண்ணையிமை மூடிக்
கதவடைக்கக் காணுகிறேன்

எண்ணங்களெல்லாம்
எழுந்தெழுந்து சிறகடித்து
வண்ணமாய் எமைக் கடந்த
வழிகளிலே பறக்க வைக்கும்
தன்மை இம்மழைக்குத்
தானுண்டு, உன்னிமையை
என்னிமையால் மூடி
இதழ் கண்ட இழுத்துறிஞ்சி
பொன்னுடலிற் பூந்தளிரின்
பூரிப்புச் சிவப்பூற
என்னடி.! என நகைக்க
இழுத்தணைத்துக் கழுத்துக்குள்
புரியாத மொழி முனகிப்
புதைப்பாயுன் புன்சிரிப்பை

அறிவேன் நான் ஆனாலும்
அறியேனாய் அடம்பிடிக்க
பொறுக்கி! என மார்பில்
பூத்திடுவாய்!,மழை வீழ்ந்து
தெறிக்கின்ற துளியில்
தெரியுதடி அக்காலம்
விரியுதடி காட்சி வெறும் அறைக்குள்
முடியாமல்
எரியுதடி தாபம் என்பெல்லாம்
விழி ததும்பிச்
சொரியுதடி கண்ணீர் சுட்டபடி
இதையந்த

அப்பாவி மழை பாவம்
அறியாமல் பொழிகிறது
எப்பாடும் அறிந்த என்
இதயத்தின் ஆண்டவரே
இப்பாவியை நீவிர்
ஏதேனும் செய்து கொள்ளும்
தப்பேதும் தெரியாத மழைக்குத்
தயை கூர்ந்து
அப்பம் கொடுத்து அருள் சொரிந்து
மனம் நிறைய
பாவ மன்னிப்பருளும்
பரமே..!

Wednesday 17 October 2012

வடலிகளின் வாழ்வெண்ணி..


எம் மண்ணின் குறியீடே
எப்படி நாம் மெதுமெதுவாய்
இம் மண்ணில் இடிபட்டும்
எழுந்தம் எனச் சொல்லுகின்ற
கம்பீர வரலாற்றின் காட்சி உரு வடிவே!

பறந்தடித்த ஷெல்லுக்கும்
பாய்ந்து வந்த குண்டுக்கும்
அறுத்து உன்னுடலை
அரணாகக் கொடுத்தாய் நீ
கறுத்த உன்னுடலுக்குள்
கசிகின்ற கனிவை நாம்
கள்ளாய், கிழங்காக
கண் போன்ற நுங்காக
அள்ளிக் குடித்தும் அடங்காமல்
உனை மேலும்
பணியாரம், பினாட்டென்று
பசி போகத் தின்றிருப்போம்
உனிலொடியற் புட்டாக்கி
உயிர்ச் சத்தைச் சேர்த்திருப்போம்

உயிர்த் தினவின் ஓர்மத்தை
உரமாகக் கொண்ட மண்ணில்
உயிராக, உடலாக
உனை முழுதாய்க் காப்பகமாய்
தாரை வார்த்த எங்கள்
தருவே! போர் மேகம்
ஆரைத்தான் இம் மண்ணில்
அழிக்காமல் விடவில்லை
பொழிந்தடித்த போர் மழையில்
பொசுங்கித் துடி துடித்து
அழிவடைந்த சனத்துக்குள்
அடங்குதடா உன் சனமும்

இழிவாய் எமையின்று
எல்லோரும் பார்த்தாலும்
அழிவின் சாம்பலினை
அப்பியபடி மெல்ல
வளருதற்கு எத்தனிக்கும்
வடலிகளின் வாழ்வுக்கு
உளமாரக் கை கொடுப்போம்
ஓர் விதையை நட்டிடுவோம்
எழுவோம் நாம் என்பதனை
எண்ணி...

Monday 1 October 2012

அழிக்கப்படும் சாட்சியங்கள்..


அலைக் கரங்களை
மார்பில் அடித்தடித்து
உரக்க அலறியது கடல்
அதன் குரலில்
இத்துணை ஆண்டுகாலக் கனவுகளும்
கண் முன்னே கலைந்து போய்
கந்தகப் புகையான ஏக்கம்
கப்பிப் போய்க்கிடந்தது

தட்டிக் கேட்க யாருமற்ற தைரியத்தில்
அதன் கறுத்த மேனியில்
சன்னங்களைக் கொட்டிப் பொழிந்து
கூத்தாடியது நிலவு

வான வல்லாதிக்கமோ
தன்னால் தீட்டப்பட்ட திட்டம்
தீரும் வரைக்கும்
ஏனிதென்று கேட்க எவரையும் விடாமலுக்கு
அடர்மெளன ஒலியால்
அனைத்தையும் மூடியது

இரவுப் படுகொலைகளின்
சாட்சிகளும், எச்சங்களும்
வெண் நுரைகளாய் அடைந்து போய்க்கிடக்கிறது
கரை முழுவதும்

மாபெரும் அவலப் பிரளயம்
அடங்கிய அதிகாலையில்
எதுவுமே தெரியாதது போல்
எழுகின்ற வெய்யோனால்
தேடி அழிக்கப் படுகின்றன
அத்தனை சாட்சியங்களும்

மீண்டும்
இருளத்  தொடர்கிறது
இரவுப் படுகொலைகள்
புலர
அழிக்கப் படுகின்றன சாட்சியங்கள்

ஆனாலும்
கடல் வற்றிப் போகாதென்ற
காலப் படிப்பினையில்
உடலைச் சுமக்கிறது
உயிர்..

Wednesday 12 September 2012

மெளன அலை..


அள்ளி எறிகிறாய் என் கவிதைக்குள்
உன் நினைவுகளையும் காதலையும்
அடர் இரவில்
யாருமற்ற கடலின் நடுவே
கைவிடப்பட்ட படகொன்றின்
செவிப்பறைகளை
நிசப்த ஊழை கிழிப்பது போல
உன்னுடைய ஆழ்மெளன மிகையொலியால்
வெடித்துப் பிய்கிறதென்
மனச் செவிகள்

பிரிவு ஒரு குழந்தையைப் போல்
நம் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி
அங்குமிங்குமாய் ஓடி
அழுதழுது முகம் வீங்கி
ஏமாற்றப் பெரு மூச்சை
எமைச் சுற்றி இறைக்கிறது

தேச விடுதலையை நெரித்துக் கிழிக்கின்ற
விலங்கினைத் தீய்க்க
பற்றி எரிந்த மண் பற்றில்
உறவுகள் உடைதலும்
சிதைதலும் உலகில்
வலி மிகுந்ததெனினும்
வழமை தான் அன்பே
பிரிவு என்னும் குழந்தை பிறந்தது
நமக்கு மட்டுமே அல்ல மண்ணிலே
நாலு லெட்சம் பேருக்கும் தானடி

குண்டுகள் வெடித்துச் சிதறிப் பறந்ததில்
கொலைக்கரம் நீண்டு குரல்வளை நெரித்ததில்
குலை சரிந்து பனை முறிந்தது
ஆயினும்
சரிந்ததைப் பார்த்த வடலிகள் ஒரு நாள்
சரித்திரம் தெரிந்து நிமிரலாம்
நாங்கள்
வரைந்திட முயன்ற வரைபடம் தன்னை
வரைய வடலிகள் நினைக்கலாம்
அன்று
திரும்பி நான் வருவேன்

வரப்போகும் அந்த வசந்தத்தின் நாளில்
உன்னை நானும் என்னை நீயும்
அடையாளம் கூடக் காணாதிருக்கலாம்
வாழ்ந்த வாழ்க்கை வழிகள் நெடுக
இனிய நினைவாய் இன்னும் இருப்பதை
உணர்வு மிகுந்த ஓர் தருணம்
எமக்கு உணர்த்தலாம். ஆயினும்
வாழுதற்கென்று  வழங்கிய காலம்
மீழ முடியா இடத்தில் இருப்பதால்
வடலிக்கானதாய் ஆகுமெம் வாழ்வு

வளரும் எங்கள் வடலியும் நாளை
தேச வரைபடக் கோட்டினைச் சரியாய்
தீவிரமாக வரைகிற போது
பென்சிலையேனும் தீட்டிக் கொடுத்தல்
பெற்றோராக எம் தலைக் கடனே
அது வரை எம்மிடை
மெளனப் பெருங்கடல் விரிந்தும் அகன்றும்
அங்குமிங்குமாய் அலைகளின் மேலே
காவித் திரியட்டும் எங்கள் காத்திருத்தலை
காதலை..

மகிழ்வென்னும் முகமூடி மாட்டல்..


எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

வாழ்ந்த வாழ்க்கை வந்த
வழி வழியே வீழ்ந்துடைந்து
பாழ் நிலம் போலிருண்டு
பயனற்றுப் போனாலும்
நானிறந்து போகவில்லை
நடக்கின்றேன் ஆதனினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

அப்பா வா என்று
அழைக்கின்ற குரலுக்கு
எப்பேர்ப்பட்ட இதயமும்
இளகும் தான், ஓடோடி
அப்படியே கட்டி அணைப்பதற்கு
அனுங்கும் தான்
இருந்தென்ன இதைவிட நீ
இறந்து விடு என மனமும்
அரித்தரித்துள்ளே
அனற்குளம்பை ஊற்றும் தான்
தெரிகிறது ஆனாலும்
தீய்ந்து விடாதிருப்பதற்கு
வரும் மாசம் எப்படியும்
வழி திறக்குமெனச் சொல்லி
இருக்கின்றேன் நாலாண்டாய்
இருப்பேன் இன்னமும் நான்
வெறுப்பென்று ஏதுமில்லை
வேதனையா? அது சும்மா
திரும்பிப் படுத்தால் தீர்ந்து விடும்
அதனாலே
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

வயசேறிப் போகிறது
வாழ்க்கையெனும் படகில்
அசைவலைகள் அழுத்தி அடிக்கிறது
அந்திமத்தின்
கரைகளை நோக்கியெம்
கை பற்றி இழுக்கிறது
வருவாயா அதற்குள் வழி இடையில்
எனப் பெற்றோர்
உருக்கும் கேள்வியொன்றை உகுக்க
ராக் கனவில்
போக்கிடம் தெரியாத பொறியில்
நான் வீழ்ந்து
சாக்களையில் கட்டிலினால்
சரிந்து வீழ்ந்தெழுந்து
ஏக்கம் மூச்சு முட்ட
ஏது செய்வேன் என்றிரவில்
தூக்கம் தொலைத்துத் துடித்தாலும்
காலையிலே
அப்படியே இருந்தபடி
அயர்ந்தெழவும் மனமேனோ
இப்படி எத்தனை பேர் என ஆறும்
அதனாலே
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

முள்ளந்தண்டின் முடிச்சுகளில்
கூரிரும்பால்
உள்ளே விட்டித்து உருட்டுவதாய்
கொதிக்கையிலும்
இதயக் கூட்டினையோர்
இடுக்கியால் இழுத்தெடுத்து
சதைகளினைப் பிய்ப்பதுவாய்
சா வலி உடம்பெல்லாம்
பரவிக் காய்ச்சலொடு பற்றி
எரிகையிற் தான்
அன்பான வார்த்தையோடு
ஆறுதலாய் வருடி விட
என் பாவி மனமேங்கும் ஏதிலியாய்
மறு நிமிடம்
தன் பாட்டில் கை நெளிந்து
தானே தடவி விட
என்னுடலம் எப்படியோ இழுத்தோடும்
ஆதலினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

தலை காய்ந்து நெஞ்சம்
தடுமாறிப் போகையிலே
தொலைவில் இருந்தாலும்
தொடுகின்ற வார்த்தைகளால்
உலை மனசின் மூடி திறந்தூதித்
தோழி சொன்னாள்
மகிழ்வென்ற முகமூடி மாட்டு
நாளடைவில்
அகமே அதுவாகிப் போகுமென்று
முடிந்தவரை
இழுத்திழுத் தம்முகத்தை
எனில் மாட்டப் பார்க்கின்றேன்
அழகாகும் காலமென்ற ஆசையிலே
ஆதலினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்..

காணுதற்கான நெஞ்சக் கனா..


உள்ளங்கை வேர்த்து
உடல் கொதித்துக் கண் செருக
அலை கரையை அலம்பியதாய்
அலைந்திருந்த என் கரத்தை
தளம்பாமல் நீயும்
தட்டி விட்டிருக்கலாம் தான்

பெரு மூச்சில் நெஞ்சுயர்ந்து
பெருக, செடிப் பூவைப்
பருக வண்டு செட்டை
பறத்தி அடிப்பது போல்
இருண்ட கண்ணிமைகள்
இருதயம் போல் அடிக்க முன்னே
ஒரு தரம் நானுமென்னை
உலுப்பி விழித்திருக்கலாம் தான்

’கோமா’ போல் புலனெல்லாம்
குளைந்து மயக்க முற
ஏமாந்து போய் நாமும்
எமை மாந்திக் கிடந்து விட்டோம்

வரண்ட நிலம் வான் மழையை
வழித்துறிஞ்சிப் புகைவது போல்
திரண்டுவந்த உடற் தீயைத்
தின்றவிந்து நனைந்து விட்டோம்

கால விதி எம்மைத் தன்
கடிய இருட் பாதைகளால்
ஓலமிட்டழ அழவும்
ஒவ்வொன்றாய்த் தனித்தனியாய்
கீலமாயெம் பாதைகளைக்
கிழித்து வேறாக்கி விட
ஞாலச் சுழற்சியினில்
நாம் பிரிந்து சென்று விட்டோம்

நாளையிலே ஓர் நாள் நாம்
நடக்கின்ற பாதைகளில்
ஆளாளை எதிர்ப்படுமோர்
அவலம் தான் நிகழ்ந்து விட்டால்
நிலம் பார்த்துக் கடப்போமா
நிமிர்ந்தெம்மைப் பார்ப்போமா
கலங்குகின்ற கண்களினைக்
கைகளினால் மறைப்போமா
கொடுப்புக்குள் சிரித்தபடி
குறுகுறுக்கும் மனம் மறைத்து
விடுப்பேதோ பார்ப்பது போல்
விண் பார்த்து நடப்போமா
மெளனத்தில் மூச்சு மட்டும்
மாரடிக்க நிற்போமா
இவ்வளவு காலமாய்
எங்கிருந்தாய் என ஆவல்
அவ்வளவும் பிதுங்க
ஆசை கொண்டணைப்போமா!

சொல்லுக்குள் கிடக்கின்ற
சுவையூறும் கவியொன்று
வல்ல கவிஞனுக்காய்
வழி பார்த்திருப்பது போல்
சில்லுக்குள் சில்லாகச்
சிறை கிடக்குமென் மனசு
உள்ளேயுன் நினைவு வர
உயரப் பறக்கிறது..

படர் மெளனம்..


பிரிவின் துயர் உன்னைப்
பிழிந்து உருக்குகையில்
அருவி போற் சொரிந்து அழுது விடு
உள்ளடக்கி
எரிந்தெரிந்து நெஞ்சால் எதுவுமே பேசாமல்
முறிந்த மரம் போல முகஞ்சரிந்து கிடக்காதே
பாழடைந்த கல்லறை போற்
பரவுகின்ற உன் மெளனம்
தோளை உலுப்பியுந்தன் துயரெனக்குச் சொல்லுதடி

நீளுமெம் பிரிவென்று நினைத்தோமா
அன்பூற
வாழத்தான் சேர்ந்தோம் வலிய விதி
எம்மிடையே
எழுதுகின்ற கதைகளுக்கு என்ன தான்
நாம் செய்வோம்
தொழுதுகொண்டு வாழ்துயரம் தொலையோணும்
என்பதற்காய்
உழுது விதைத்த மண்ணில்
உரம் போட நினைத்தேன் நான்
அழுதழுது நீயும் அனுசரித்தாய் எம் சேர்வின்
விழுதொன்றும் உன்னோடு
விருட்சமாய் வளர்கிறது
எழப்போகும் அதனுடைய
எதிர்காலத்துக்காயேனும் 'அழுதூத்து'
உன்னுடைய
அடர் மெளனம் கரையட்டும்

புறாவின் குறுகுறுப்பை,புன்னகையைச்
சுமந்தபடி
உறவு கொண்டிருந்த காலத்தில்
உணர்வொழுக
இறக்கும்வரை உன்னோடு இருப்பேன்
என்றன்று
உறக்கத்திலும் நீ சொன்ன ஒட்டுறவை
எண்ணிப் பார்
மறக்கும் பழக்கமென்றும்
மனிதருக்கு உண்டெனினும்
கிறக்கம் தருமன்பும் கிழிந்துறைந்து போமோடி?

உன் விழி பாய்ச்சிய உயிர் கவர்
காந்தமும்
உன்னுடல் வீசிடும் ஒருவகை
வாசமும்
இன்றுமென் நாசியில் எழுந்தெழுந்தூறுது
கண்களில் அலையலைக்
காட்சிகளாகுது
குன்றென இருந்த நான்
குமைந்து குலைந்துயிர்
சென்றெனை விட்டு சிதம்பிப் போம்வரை
உன்னுடை வாசமும் கண்ணுமே முடிவிலும்
என்னுடன் சென்றிடுமென்பதைப் புரியடி!

புலம்பெயர் குளிர்ப்புழுக்கம் புரியாமல்
மிகப் பெரிதாய்
புலப்படலாமுனக்கென் புன் வாழ்வு
இங்கே நாம்
’விலங்கொடு’ விலங்காய்
வேறொரு மனிதராய்
கலங்கிய மனசொடு காலம் கடத்திடும்
நிலமதில் வந்துநீ நிற்கிற வரைக்கும்
உலக உருண்டையின் ஒட்டடை
உணராய்

பிரிவென்னும் தீயெரியப்
பெரும் மெளன எண்ணையினை
தெரிந்தே நீ ஊற்றுகின்றாய் தீய்வனென்று
தீயட்டும்
உருகுகின்ற மணம் விழுதை
உறுத்தாமற் பார்த்துக் கொள்

எத்தனையெத்தனையோ பேரின்னும்
இது போல
தத்தமது வாழ்விற் தகிப்பதற்கு
எவரெல்லாம்
மொத்தமாய் முழுதான காரணமோ
அவர் நோக்கி
இத் தீயில் ஓர் கவளம் எடுத்துப்
பலம் சேர்த்து
மொத்தமாய் அவரழிய மூசி எறி
ஓர் தேசம்
பத்தரை மாற்றுத் தங்கமாய்
பர்ணமிக்கும்
அத்தினத்தில் நானுன்னை அடைவேன்
அதன் பிறகே
மடிவேன் நான் உன்னுடைய
மடியில்..

தலையணை..


வீணீர் வழிகையிலும்
விம்மி உடைகையிலும்
ஏனின்னும் இறக்கவில்லை
என நொடிந்து முகம் புதைத்து
சூடாய்க் கண்ணீரைச்
சுவாசத்தைச் சொரிகையிலும்
ஓடாமல் என்னோடே
ஒட்டிக் கிடந்த படி
அத்தனையும் உன்னுள்
அகத்துறிஞ்சி நானாகி
எத்துணை அன்போடு
என் பிடரி வருடுகின்ற
மொத்தமாய் எனையறிந்த
முதற் பெண்ணே ! ஒரு வேளை
இயற்கையாகத் தான்
என் சாவு நிகழுமென்றால்
உன்னுடைய மடியிற் தான்
உயிரவிழும், தலை சரியும்

நாரி கொதித்தாலும்
நடந்து கால் வலித்தாலும்
ஆரிருக்கார் உனை விட்டால்
அமுக்கி விட, கைகளுக்குள்
அவளாக நீ தானே
அணைத்துச் சூடேற்றுகிறாய்
எவளாலும் உன்னைப் போல்
இத்தனை முத்தத்தை
வருடக் கணக்காக
வாய் வலிக்க வாங்கேலா

திருட்டுக் காமத்தை
தீர்ப்பதற்குத் தீராமல்
அருட்டி உன்னுடலை
அளைகையிலும் அசராமல்
உருட்டும் திசைக்கெல்லாம்
உடல் வளைப்பாய் என் அன்பே!

கலவி முடிந்த கணத்தில் மெதுவாக
விலகிப் படுக்காய் வேறு திசை பார்க்கமாட்டாய்
புலரும் வரை என் மேலே
பூத்திருப்பாய், காலையிலே
புன் சிரிப்பாயெனைப் பார்த்து
புதுப் புது அர்த்தத்தில்

என் வாழ்வு எனைப் பார்த்து
ஏளனமாய்ச் சிரிப்பதுவும்
உன்னுடைய சிரிப்புக்குள்
ஒளிந்து கொண்டிருக்குதென்று
கண்ணோரம் வழிகிற நீர்
காதிற்குள் சொல்கிறது..

போதாத காலத்தைப் புறந்தள்ளல்..


இத்தனை காலமாய்
இடர் கடந்து நடந்து வந்த
அத்தனை வலிகளையும்
அலட்சியமாய் மேம் போக்காய்
அதுக்கென்ன உன்னை
ஆர் கேட்டார் எனச் சொல்லி
ஒதுக்கி ஓர் புறத்தில் தள்ளுங்கள்
ஒடியேன் நான்

எப்படித்தான் சாகாமல்
இதைத் தாண்டி வந்தீர்கள்
தப்பாமற் சாதலே தர்மம்
தவறி வந்து
எப்படியும் மீண்டு எழுவமென்றால்
ஏற்கேலா, முடியாது
அப்படியே நெருஞ்சி முள்ளை
அள்ளி வார்த்தைகளால்
அறையுங்கள் முகத்தில்
அசையேன் நான்

நுனி நாக்கில் ஆங்கிலத்தை
நொடிப்பதற்குத் தெரியாத
உனையும் ஓராளாக ஒண்ணோம் நாம்
ஒதுங்கிச் செல்
ஆண்டுகளாய் நாம் அணிந்த
ஆடைகள் தான் அதற்கென்ன?
அகதி தானே நீ அணி, புத்தாடை
வேண்டவும் வழியில்லை
வீணாய் ஏன் வீறாப்பு? கொதிக்கின்ற
தன் மானத்தைத் தட்டிப் பாருங்கள்
தளரேன் நான்

மீண்டுவர இயலாத
மிகக் கொடுமைச் சிறைகளினைத்
தாண்டி இங்கே வந்ததெல்லாம்
தளர்ந்துடைந்து போக அல்ல
ஏதோ கடமையின்னும் இருப்பது தான்
அதுவரையில்
போதாத காலத்தைப்
பொறுப்புணர்ந்து கடப்பேன் நான்

எதற்காக என் பயணம்
இழுத்தோடி வந்ததுவோ
எதற்காக இத்தனை பேர்
இவ்வளவும் வந்தாரோ
அதற்கான புள்ளியினை
அடையும் வரை என்னை விட்டு
சிதைந்துடைந்து போகாதே
சீவனே என் சிவனே..

Sunday 9 September 2012

மாறாது நீளும் பருவங்கள்..

என் நினைவுகளற்று
பாசி படிந்துபோய்க் கிடக்கும்
உன் மனப்பாறையில்
ஏறி உட்கார முனைந்து
இடுப்பொடிய வீழ்வது தான்
என் வாழ்நாட்களுக்கான
இப்போதைய காலம்

வாழ்ந்த நாட்களின்
வசந்த நினைவுகள் தான்
வாழும் நாட்களின்
இலையுதிர் நிலையினை
எப்படியோ தாங்கி ஏந்திச் செல்கிறது

மொட்டரும்பும்
பருவமினித் திரும்பாதெனினும்
இதழ் திறந்து
பூ மலர்ந்து மணம் அவிழ்ந்த
அன்றைய காலம்
எழுந்தெழுந்து வரும் மூச்சில்
இன்றைக்கும் கமழ்கிறது

நானின்னும் உணரத் தலைப்படாத
பூமிப் பந்தின் வேகச் சுழற்சியில்
என்றைக்கோ
எங்கேனும் இடறுப்பட்டாவது
எமக்கான பருவமென்றொன்று
வந்துவிடுமெனக் காத்திருக்கும்
என் தந்தையர் தேசம் போல
காலத்தின் முதுகில் நானும்
என் முதுகில் காலமுமாய்
மாறி மாறிச் சவாரி செய்கிறோம்

அவளைப் போலவே புதிர் நிறைந்ததாய்
அறிந்து விட முடியாமலும்
அர்த்தம் புரியாமலும்
அகன்று விரிகிற வெளியில்
நானும் தேசமும் காலமுமாய்
நேற்றைய நினைவுகளைப் பருகி
இன்றைய மன வயிற்றை நிறைத்துக் கொண்டு
நாளையைத் தேடி நடக்கிறோம்..

Friday 3 August 2012

வீழ்ந்தாலும் வாழ்வேன்..

கையைக் கூடக் காட்டாமலும்
தலையைக் கூட ஆட்டாமலும்
எதற்கென்றே புரியாமல்
என்னிலிருந்து
நீ போன பின்னாலும் கூட
கருக்கட்டிய மேகங்கள்
வானத்தில் கூடும்
ஊழி உடுக்காகும் இடி
என்னை வெட்டி வீழ்த்திய
உன் இமை வெட்டாய்
மின்னல் வெட்டி மழை பொழியும்
நிலம் நனைந்து ஈரலிக்கும்
ஆனால் அதில் குளிர்ச்சி இருக்காது

இன்றைய நாட்களில்
பனிப்புகையின் நடுவே
உனக்கு மங்கலாகத் தெரிகின்ற
என் உருவம்
நாளுக்கு நாள் கூடுமுன்
தேகச் சூட்டின் தகிப்பில்
ஆவியாகி அகன்று போகலாம்
போகும்,
கால அலை அடித்து
உன் மனக்கடற்கரையில் இருக்கும்
என் நினைவுச் சுவடுகள்
அரிக்கப்பட்டு விடலாம்
விடும்,
ஒன்றாக இருந்துடைந்த
லெமூரியாக கண்டம் போல்
சிதையுண்டு போன
ஓர் புராதன நினைவாய்
நான் உனக்கு ஆகி விடலாம்
ஆகும்

காலுதைத்து
தலை கொண்டு பிளந்து
ஏதோ ஓர் நிலப்பிதிர்வில்
ஊற்றின் ஓர் துளியாக
உயிர்கொண்ட நான்
ஓடி ஓடிச் சிற்றாறாகி
அனுபவக் கிளைஆறுகளையும்
அணைத்தபடி பேராறாய்
இனியும் ஓடிவிட முடியாத
ஓர் மலையுச்சிக்கு வந்துவிட்டேன்
கீழே அதலபாதாளம்
எந்த நொடியும்  இதிலிருந்து
நான் உருண்டு வீழ்ந்து விடக் கூடும்
வீழ்வேன்
ஆனாலும் என் வீழ்ச்சி
விழும் போதும் அழகாகும்
நீர் வீழ்ச்சி போலத்தான்
அழும் படியாய் ஏதும் இருக்காமல்
நிலம் மலர
அழகாகத்தான் வீழும் அறி..

வற்றிய கடல்..

இதற்குமேலும் உன்னால்
எதுகுமினித் தாங்கேலா
எதற்கு மனமே நீ
இன்னும் இழுத்தடிக்கின்றாய்?

உயிருக்குச் சொல் உடலில்
ஓடியது காணுமென்று
மயிரளவும் மதிப்பில்லா
மண்ணான வாழ்வொடு வீண்
மல் வேண்டாம் போதுமென
மதி உரை நீ, ஆறுதலாய்
சொல்வது போற் சொன்னால்
உயிர் கேட்கும் சொல்லிப் பார்

ஓய்வில்லாப் பயணியாய்
உட் சென்றும் வெளி வந்தும்
தேய்மானம் இல்லாமல்
தீராமல் திரிகின்ற
மூச்சோடு பேசி முடிவைக் கேள்
முயன்றாலும்
வீச்சற்று விழப்போகும்
வீணுடலின் பாதைகளில்
காலத்தைத் தாழ்த்தாமல்
கலையச் சொல், வீழ்ந்தாலும்
எவருமே எடுத்தேந்த
இல்லாத இவ்வுடலில்
அவமாகக் காலத்தை
அழிக்காமல் போகச் சொல்

தினமும் மடிப்படைந்து
தீவிரமாய் எண்ணி எண்ணி
கனவும் கண்ணீரும்
கண்களுக்குள் வடிக்கின்ற
மூளைக்குச் சொல்
முட்டாள்த் தனத்தை எல்லாம்
வேளைக்குக் குறைத்து
வெறுந் துடிப்பை நிறுத்தி விட்டு
புலன்வதைக்கும் பொறிமுறையைப்
போட்டுறைந்து போ என்று,
கலங்கடிக்கும் கட்டளைகள்
காணும் என்று சொல்லி விடு

வற்றிய கடலாக
வறண்டுடைந்த நிலமாக
இற்று வீழ்ந்து விட்ட மரமாக
இயல்பறுந்து
செத்துயிர்த்துச் செத்துயிர்த்துச்
சிதைவானேன்? என் மனமே
இத்தனைக்கு மேல் பிறப்பால்
ஏலாது சீக்கிரமாய்
முற்றுப்புள்ளி வைத்திதனை முடி..

அப்படியே போ..

விம்மி அழுதென்னை
வீழ்த்தாதே, மூக்கிழுத்து
கம்மிய குரல் செருமிக்
கதைக்காதே, உனைவிட்டு
எப்படியென் வாழ்க்கையென
ஏதுமினிச் சொல்லாதே
முப்பொழுதும் உன் நினைவே
மூச்சென்று முனகாதே

எப்பொழுதோ எம் வழிகள்
எழுதப் பட்டாயிற்று
இப்பொழுதே எம் இருப்பு
எமக்குத் தெரிகிறது
தப்பான காலத்தின்
தாள் திறந்து இவ்வளவும்
எப்படி நாம் வாழ்ந்திருந்தோம்
எனுமுண்மை புரிகிறது

போகப் போவதென்று
புறப்பட்ட பிறகென்ன
தாக நினைவும் தவிப்பும்?
தள்ளாடும்
மோக நினைவை
முழுதும் எரித்து விடு
ஆக வேண்டியதில்
ஆயத்தப் படுத்துன்னை

சிவப்பு நரம்பூறிச்
சிந்தும் விழிகளினால்
தவிப்பொழுகப் பார்த்தென்னைத்
தள்ளாட வைக்காதே
நெஞ்சுயர்த்திப் பெருமூச்சை
நெரிப்பது போல் விட்டெந்தன்
கொஞ்ச உறுதியையும்
குலைக்காதே, சாவீட்டுக்

காரியத்தை முடித்த
காடாற்றுப் பூசாரி
வாரிச் சுருட்டி
வந்த இடம் பார்க்காமல்
நேரே பார்த்தபடி
நிம்மதியாய்ச் செல்வது போல்
அப்படியே போ
அணுவளவும் திரும்பாதே
இப்படியே என் பாட்டில்
ஏதோ நான் போகின்றேன்..

உயிர் வினா..

நிலம் பிளந்தூறுகின்ற
நீரூற்றைப் போல, மாறும்
உளம் இருக்கும் உடலினுள்ளே
ஊறுவதா உயிர் அருவம்?

வீசலுறும் விந்தோடி
விளை சூலில் நுளைந்த பின் தான்
கேசமுறும் உயிர் முளையும் தோன்றுதென்றால்,
உயிரென்ன
இரெண்டின் சேர்க்கையினால்
எழுகின்ற ஒன்றா? இல்லை
உயிர் தான் விந்தாமோ? உடல் சூலோ?
ஆயின்
ஒரு கோடி உயிர் கொன்றா
உயிர் ஒன்று வருகிறது?

மின்சாரம் உயிர் என்றால்
மின் கடத்தி உடல் என்றால்
மின்குமிழ் தான் ஐம்புலனும்
மெய்ம்மைதான், அதைப்பாய்ச்சும்
ஆழியினைப் போடுவதார்?
அந்த விரல் எந்தவிரல்?

இப்படியாய்
எந்தப் பதிலும்  எதுமுயன்றும் புரியாத
வந்த வழி தெரியாத வாழ்வில் வீணாக
நொந்து குமைவானேன்? நொடிவானேன்?
பிறப்பென்னும்
விந்தை உதிப்பெண்ணி விய..

Wednesday 4 July 2012

தாவூத்தின் கதை..

கண்ணை இறுக்கமாக மூடி தலையுள் இங்காலும் அங்காலுமாக ஓடித் திரியும் நினைவுகளை சுற்றித் திரிய விடாமல்  வைத்திருக்கும் படி மனசால் மூளைக்குச் சொன்னபடி மெதுமெதுவாக நினைவுகள் அமைதி அடைய அரைத்தூக்கத்துக்குள் போய்க் கொண்டிருந்தான் சமரன். வழமை போலவே இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது அடிக்கிற சத்தம் கூட அவன் காதுக்குக் கேட்கத் தொடங்க மரணபயம் சமரனைத் தொற்றிக் கொண்டது படுக்கையில் இருந்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தபடி ஏன் இப்படி அடித்துத் தொலைக்கிறதென இடது நெஞ்சில் கையை வைத்துப் பார்த்தான் அடிக்கும் அதிர்வை அவனால் உணரமுடிகிறது, நடுங்கும் குளிருக்குள்ளும் தலையால் வியர்த்துக் கொட்டுகிறது, கட்டிலில் தொடர்ந்தும் இருக்காமல் எழுந்து நிற்கிறான் குதிக்கால் வரை நெஞ்சடிக்கின்ற சத்தம் கடகடவெனக் கேட்கிறது. மூக்கில் ஏதோ ஈரலிப்பாய் உணர்ந்த அவன் விரல்களால் அதைத் தொட்டுப் பார்க்க ஏதோ பிசுபிசுக்கிறது, கையடகத் தொலை பேசியின் வெளிச்சத்தில் அது என்ன என்று பார்த்தால் ரெத்தம் பயம் இன்னும் அதிகமாயிற்று குளியல் அறைக்குள் போய் மின் விளக்கைப் போட்டு கண்ணாடியில் மூக்கைப் பார்த்தால் ரெத்தம் மெதுமெதுவாகக் கசிந்து கொண்டிருந்தது, சமரனுக்கு கொஞ்ச நாளாகவே நெஞ்சு இப்படிப் பலமாக அடிக்கும் போது நாசியில் குருதி வாடை அடிக்கும் தான், ஆனால் அது இன்று தான் வெளியே கசியத் தொடங்கி இருந்தது

அகதி முகாமில் தன்னோடு இருக்கும் தோழர்களை எல்லாம் இதற்காகப் போய் எழுப்ப முடியாது என்று நினைத்த அவன் பனியையும் பார்க்காமல் கட்டி இருந்த சாறத்தோடு மேலே சட்டை கூட மாட்டாமல் முகாமின் முன் கதவைத் திறந்து ஆசுவாசமாகக் காற்று வாங்குவதற்காக வெளியே போனான்.முகாமின் இரவு வேலைக்குப் பொறுப்பாக நின்றவன் உள்ளிருந்து ஆர் யூ கிறேசி என்று என்று கத்தினான். ஆமாடா இங்க எல்லாரும் கிறேசிதான் பர்சன்டேஜ் தான் வித்தியாம் என்று பதில் சொல்லி விட்டு உள்ளிருந்து அவன் பதிலுக்குச் சொல்வது எதனையும் காதில் வாங்காமல் அவன் பாட்டில் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி மெதுமெதுவாக மூச்சை உள்ளே இழுத்து விட்டுக் கொண்டிருந்தான். உடம்பிருந்த சூட்டுக்கும், வியர்க்கும் வியர்வைக்கும் மைனஸ் குளிர் எதுவும் செய்யவில்லை, வேகமாக அடித்துக் கொண்டிருந்த இதயம் மெதுமெதுவாக சாதாரண நிலைமைக்கு வரத் தொடங்கியது. சமரனைப் போலவே தூக்கமில்லாமல் இரவிரவாக நடந்து திரியும் பழக்கமுள்ள அவனது ரஷ்ய நண்பன் வெஸ்கியும் அந்த நேரத்தில் புகைப்பதற்காக வெளியில் வந்தான்.  இந்தப் பனிக்குள் சமரன் மேலாடை அணியாமல் நிற்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம், வெஸ்கி ரஷ்ய ராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றியவன், ராணுவத்துள் ஏற்பட்ட மனக்கசப்புகளால் அங்கிருந்து வெளியேறி சென்றவருடம் இங்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி இருந்தான். தான் கே.ஜீ.பி படைப்பிரிவில் இருந்தபோது சில் பயிற்சிகளுகாக இப்படித்தான் மேலாடை அணியாமல் நடுங்கும் பனிக்குள்ளால் ஓட விடுவார்கள், நான் பனிக்குள்ளேயே பிறந்து வளர்ந்தவன் அதனால் அத்தகைய பயிற்சிகளை என்னால் சமாளிக்க முடிந்தது, நீயோ ஆசிய நாடொன்றின் வெயிற் கொதிக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டவன் எப்படி உன்னால் தாங்க முடிகிறது, ஒருவேளை இந்த நேரம் மனைவியின் நினைவு வந்து விட்டதா என்ன என்று சமரனை அவன் கிண்டலடித்தான். சொண்டை சுழித்து சிரித்து விட்டு BRO! மனசு சரி இல்லை, முத்தங்கள் இல்லாவிட்டால் புகைத்தலைத் தவிர்க்க முடியாது எனக்கும் ஒரு சிகெரெட் கொடு என்று சமரனும் வாங்கிப் பத்தினான். நெஞ்சடிப்புக் குறைந்து  உடல் குளிரை உணரத் தொடங்கியது  சரி வருகிறேன் என்று சொல்லி விட்டு சமரன் தன்னுடையஅறைக்கு திரும்பி வந்தான்
அவன் படுக்கைக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியையும், கட்டிலையும் பார்க்க சமரனுக்கு உள்ளங்கையில் இருந்தும் அடிவயிற்றில் இருந்தும் ஏதோ ஒரு வகையான திரவ மின்சாரம் விறுவிறென தலைக்கு ஏறிக் கொண்டிருந்தது. நினைவுகள் அவன் மனசின் மூளையை நார் நாராய் உரித்துத் தின்னத் தொடங்கியது.

சொந்த நாட்டில் இருந்து தப்பி நாடு நாடாக நான்காண்டுகளாக ஓடி கடைசியில் ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரிய பின்பும் இந்த நாட்டின் ஒவ்வொரு அகதி முகாமாக சமரனை அவர்கள் மாற்ற மாற்ற ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு அவன் ஓடிக் கொண்டிருந்தான். நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஓடுவதற்கு அவனுடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக இருந்தாலும் இந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய பின்பும் ஒரு முகாமிலையே அவனை வைத்திருக்க முடியாமல் அடிக்கடி வேறு வேறு முகாம்களுக்கு மாற்றுவதற்குக் காரணம் வேறெதுவும் அல்ல உலகைப் பிரட்டும் அவனுடைய குறட்டை தான், ஒவ்வொரு முகாமும் 200 தொடக்கம் 300 பேரைக் கொண்டதாகவும் அதில் உள்ள ஒவ்வொரு அறையிலும் நான்கு நான்கு பேராகவும் விட்டிருந்தாகள். அவன் தூங்கிய அறைகளில் இருந்த ஒவ்வொரு நண்பர்களும் காலையில் எழுந்து நித்திரை இன்றிக் கண் சிவந்தபடி அவனைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். சிலர் உலுப்பியும், தாங்க முடியாத சிலர் தூங்கிக் கொண்டிருக்கும் அவன் முகத்தில் குளிர் நீரை ஊற்றியும் அவன் தூக்கத்தைக் கலைத்திருக்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் இரவெல்லாம் விழித்திருந்து விட்டு பகலில் அவர்கள் வெளியில் போகும் சமயத்தில் மட்டுமே அவனால் தூங்கக் கூடியதாக இருந்தது. இதனைப் பார்த்துத் தான் முகாமின் முகாமைத்துவங்கள் அவனை ஒவ்வொரு முகாமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்,கடைசியாக ஒருவாறு இந்த முகாமுக்கு வந்து சேர்ந்தான்

இங்கேயும் குறட்டை விடுவோர் எந்த அறையில் இருக்கிறார்கள் எனப் பார்த்தே அதில் அவனித் தங்க விட்டார்கள் அந்த அறையில் அவனைத் தவிர குர்திஷ், லெபனான், சோமாலியன் என மூன்று நாட்டைச் சேர்ந்த தோழர்கள் இருந்தார்கள், இவர்கள் மூவருமே குறட்டை விடுபவர்களாக இருந்தாலும் சமரன் விட்ட குறட்டையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. நாங்களும் குறட்டை விடுறம் தான் ஆனா நீ விடும் குறட்டை MRI scan சத்தம் போல் மாறி மாறி வருவதால் தூங்குவது சிரமமாக இருக்கிறதென்று கோபித்துக் கொண்டார்கள், ஆயினும் நாளடையில் அவர்கள் நண்பர்களாகி விட்ட பிறகு அவர்களுக்கும் சமரனின் குறட்டை தாலாட்டாகி விட்டது. உன்னுடைய மனைவி உன் குறட்டையில் இருந்து தப்பி கொஞ்சக் காலமாவது நிம்மதியாகத் தூங்குவதற்காகத் தான் அல்லா உங்களைப் பிரித்து வைத்திருக்கிறார் என்று சமரன அவர்கள் கிண்டலடிப்பார்கள், அவனோடு அறையில் இருக்கின்ற மூவருமே தம்முடைய நாடுகளில் இருக்கும் போது அந்தந்த நாடுகளின் விடுதலைப் போராட்ட அமைப்புகளில் போராளிகளாக இருந்தவர்கள் என்பதனால் தினமும் அரசியல் பேசுவதற்கு அங்கு பஞ்சமிருக்காது. குர்திஷ் இன மக்களுக்கு நிகழ்ந்தது தான் ஈழத் தமிழர்களுக்கும் நிகழ்ந்தது என்பதிலும், ஈழத்தின் ஆரம்பகாலப் போராளிகள் சிலர் லெபனானில் பயிற்சி எடுத்தார்கள் என்பதிலும் சோமாலியர்களின் உருவத் தோற்றம் ஆபிரிக்க இனத்தவர் போலல்லாது பார்ப்பதற்கு ஆசியர்கள் போலவே இருப்பதாலும் என்னவோ நால்வரிடையேயும் பேசுவதற்காக ஆரோக்கியமான மனவெளியும், ஏதோ ஒருவகையான ஒற்றுமையும் இருந்தது. அண்மையில் குர்திஷ் இனமக்களின் விடுதலைக்காக ஐரோப்பிய நாடொன்றில் நடை பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பெருமளவில் ஈழத் தமிழர்களும் கலந்து கொண்டது சமரனுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவை இன்னும் வலுப்படுத்துவதாய் இருந்தது. சில வேளைகளில் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் முக்கியமான போராளித் தோழர்களுக்கும் சமரனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். இப்படியாக அவர்களுக்குள்ளான உறவு மிகவும் ஆரோக்கியமானதாக வளர்ந்து கொண்டே இருந்தது.

இதற்குள் சமரனும் அவனது சோமாலிய நண்பன் தாவூத்தும் தான் திருமணமானவர்கள். தனிப்பட்ட வாழ்வைப் பொறுத்தவரை அவர்களுடைய துன்பம் ஒரே மாதிரியானதாகவே இருந்தது. தாவூத்தும் சமரனைப் போலத்தான் திருமணமாகி ஓராண்டிலேயே மனைவியையும் குழந்தையையும் பிரிந்து நாட்டை விட்டு வெளியேறியவன் இருவருமே ஸ்கைப் என்ற ஊடகக் கடவுளின் துணையால் தான் குடும்பம் நடாத்திக் கொண்டிருந்தார்கள் சமரனின் மகன் ஆக்காட்டு அப்பா என்று சொல்லி ஸ்கைப்புக்குள்ளால் நாட்டில் இருந்து சோறூட்டும் போது தாவூத் மாமாவுக்கும் ஊட்டப் போறன் கூப்பிடுங்கோ என்று சொல்லித் தீத்துவான் பருப்பும் சோறும் கறியும் குளைச்சு web cam ல் அமத்தி தீத்தித் தீத்தியே web cam பழுதாகி விட்டது என சமரன் மனைவி புலம்பும் அளவுக்கு ஊட்டல் நடக்கும்  தாவூத் நாட்டை விட்டு தவிர்க்க முடியாமல் வெளியேறும் போது அவன் மகன் இரெண்டு மாதக் குழந்தையாக இருந்தான், இப்போது அவனுக்குக் ஐந்து வயதாகி விட்டது. எப்போது நீங்கள் வருவீர்கள் உங்களை எப்போது பார்ப்பது எத்த்னை நாளைக்குத் தான் குழந்தைக்குப் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது என்று தாவூத்தின் மனைவி அழும் போதெல்லாம் சமரனின்கதையைச் சொல்லித் தான் அவளை தாவூத் ஆறுதல் படுத்துவான்.

இங்கே வருகின்ற ஆபிரிக்க நண்பர்கள் எல்லாம் விரைவிலேயே ஒரு வெள்ளைக் காரியைப் பிடித்து விடுவார்கள், அல்லது வெள்ளைக் காரிகள் எப்படியாவது இவர்களைப் பிடித்து விடுவார்கள். விசயம் தெரிந்த வெள்ளைக் காரிகளுக்கு கறுப்பர்கள் மீது கொள்ளைப் பிரியம். எனக்குத் தெரிய பெண் நண்பிகள் இல்லாத எந்த ஒரு ஆபிரிக்கனும் இந்த முகாமில் கிடையாது. ஆனால் தாவூத் இங்கே வந்து நான்கு வருடங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு பெண் நண்பியையும் பிடிக்கவில்லை. சிலர் தாமாகவே வந்து கேட்ட போதும் தாவூத் அதற்குச் சம்மதிக்க வில்லை. அந்தளவுக்கு அவன் குடும்பத்தோடு ஒட்டுறவாக இருந்தான். நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கானோர் இருக்கும் முகாமில் பலர் நண்பர்கள் ஆவார்கள் சிலர் தான் மனசுக்குப் பிடித்துப் போவார்கள். அப்படி மனசுக்குப் பிடித்த ஒரு ஆளாக தாவூத் சமரனுக்கு வாய்த்தான்.

ஓர் அழகான இளம் பெண்ணின் செல்லப் பேச்சில் இருந்து அலுங்கிக் குலுங்கி வழுக்கி விழும் சொற்களைப் போல நெழிந்தும் வளைந்தும் ஆடி ஆடிச் செல்கிற அவர்கள் இருக்கும் முகாமுக்கு அண்மையில் இருக்கும் ஆற்றின் கரையில் மாலைவேளைகளில் அவனும் தாவூத்துமாய்ப் போயிருந்து அவர்களுடைய பால்ய காலக் காதல்க் கதைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள் விடைகள் இல்லாமல் நிண்டு செல்கின்ற அகதி வாழ்க்கையில் இப்படியான நினைவு மீட்டல்களே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது இங்கே வந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது இனியும் என்னால் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது சுட்டாலும் பரவாயில்லை நான் நாட்டுக்குப் போகப் போகிறேன் என்று கொஞ்ச நாளாகவே அதீத வெறுப்பில் தாவூத் அடிக்கடி புலம்பிக் கொண்டிருந்தான்.
மூன்று வாரங்களின் முன்பு காலையில் வழமை போலவே அவர்கள் நால்வருமாக அவரவர் கணனிகளில் ஊர்ச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிந்த போது தாவூத்துக்கு கடிதம் வந்திருப்பதாக வெஸ்கி வந்து சொல்லி விட்டுப் போனான் மதியம் சாப்பிட வரும் போது எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு தாவூத் ஏதோ மும்முரமாக செய்தி பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ முக்கிய செய்தியைப் பார்த்திருப்பான் போல மிகவும் பதட்டமாகி அவன் கைத் தொலை பேசியில் இருந்து யாருக்கோ அழைப்பெடுத்தான், சர்வதேச அழைப்புக்குக் காசு போதாதாம் இந்த நேரத்தில் பார்த்து போனில் காசில்லை BRO தொலை பேசியை ஒருக்காத் தரமுடியுமா என்று சமரனிடம் இருந்து தொலைபேசியை வாங்கி, அடிக்கிறான், அடிக்கிறான் அழைப்புக் கிடைகவில்லை. கண் கொஞ்சம் கலங்கி இருந்தது, கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது, ஏன் தாவூத் என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டம் என்று சமரன் கேட்டபோது, இல்லை BRO மனைவின் எண்ணுக்கு எடுக்கிறேன் கிடைக்குதில்லை, அதுக்கேன் பதட்டப்படுகிறாய் தாவூத் அவள் மகனை பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போயிருப்பாள் அது தான் யோசிக்காதே கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் அழைக்கலாம் என்று சமரன் சமாதானப் படுத்தினான். இல்லை BRO நேற்று சோமாலியாவில் என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள சந்தையில் குண்டு வெடித்திருக்கிறது, நேர்று Sunday Market என்ற படியால் மனைவியும்  குழந்தையும் மலிவுப் பொருட்கள் வாங்கப் போயிருப்பார்கள், நேற்று நானும் பேசவில்லை, இன்று அடிக்க தொலை பேசி வேலை செய்யுதில்லை அது தான் பயமாக இருக்கிறது என்றான், அதன் பின் பல தடவை முயற்சி செய்தும் அவளின் தொடர்பு தாவூத்துக்குக் கிடைக்கவில்லை.  மாலை ஊரில் இருந்து தாவூத்தின் எண்ணுக்கு அழைப்பு வந்தது அவன் என்ன நினைத்தானோ தெரியவில்ல என்னெண்டு கேள் என சமரனிடமே தொலை பேசியைக் கொடுத்தான், அதில் தாவூத்தோடு முன்னர் இயக்கத்தில் இருந்த போராளித் தோழன் தான் பேசினான்.
தாவூத் பதட்டத்தில் பிறப்புறுப்பை கையால் கசக்கியபடி சமரன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான், ஒரு நிமிடம் தான் விசயத்தைச் சொல்லி விட்டு, சொன்னவன் வைத்து விட்டான். சமரனுக்கு என்ன சொல்லதென்று தெரியவில்லை தாவூத்தை  கட்டி அணைத்து தோள்களை இறுகப்பற்றினான்.அந்தக் குண்டு வெடிப்பில் தாவூத்தின் மனைவியும், குழந்தையும் உடல் சிதறி இறந்து போனதை நினைக்க சம்ரனுக்கும் ஊர் நினைவு வந்து தலை கிறுகிறுக்கத் தொடங்கியது

  அறையில் இருந்த நண்பர்கள் இருவரும் தாவூத்தை கட்டி அணைக்கப் போனார்கள் அவர்கள் இருவரையும் உதறி விட்டு நிலத்தில் குந்தி இருந்து இரெண்டு கைகளாலும் தரையில் குத்தி அழுதான், கட்டில் இரும்புச் சட்டத்தில் தலையை அடித்தான், கடைசி வரை என்னைத் தெரியாமலேயே என் மகன் போய் விட்டானே அல்லா.. எனக்காவே இவ்வளவு காலமாய்க் காத்திருந்த மனைவியையும் மகனையும் என் வாழ் நாளில் இனி எப்போதுமே பார்க்க முடியாத படிக்குச் செய்து விட்டாயே என்று கத்திக் கொண்டு கத்தியை எடுத்து கழுத்தை அறுக்கப் போனான். எல்லோருமாக அவன் கைகளைப் பிடித்து மடக்கி கத்தியை பிடுங்க, திமிறிக் கொண்டு மாடியில் இருந்து குதிப்பதற்கு ஓடினான். அவனை அறியாமலலேயே காலால் சிறு நீர் வழிந்து கொண்டிருந்தது. மூவருமாகச் சேர்ந்து ஒருவாறு அவனைப் பிடித்து அமத்திக் கட்டிலில் கிடத்தினார்கள் அன்று முழுக்க அவன் அப்படியே சித்தப் பிரமை பிடித்தவன் போல இடைக்கிடை கத்தி அழுவதும் பின்னர் அமைதியாகி விடுவதுமாகப் படுத்திருந்தான். இரவு இரெண்டு மணிவரை அவர்கள்அவனுக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள் திடீரென்று எழுந்த தாவூத் கணனியைத் திறந்து ஸ்கைப்பில் உள்ள Snap Shot பகுதியில் மனைவியுடனும், மகனுடனும் பேசும் போது எடுத்த படங்களை திரும்பத் திரும்பப் பார்த்தான், BRO! இனியொரு போதும் என் மனைவியும், மகனும் ஸ்கைப்புக்கு வரமாட்டார்கள் இல்லையா? என்று ஈனஸ்வரம் நிறைந்த குரலில் சமரனைப் பார்த்துக் கேட்டான். எச்சிலை வில்லங்கமாக விழுங்குவதைத் தவிர வேறெதுவும் சமரனால் அப்போது சொல்ல முடியவில்லை. அழுதழுது களைத்து தாவூத் அப்படியே தூங்கி விட்டான்.

சமரனுக்குத் தூக்கமே வரவில்லை தேனீர் குடிப்பதற்காக கீழே இறங்கிப் போனான். இது தாவூத்துக்கு குடிவரவு திணைக்களத்திடம் இருந்து வந்த கடிதமென அலுவலகத்தில் இருந்த வெள்ளையன் கொடுத்தான், இப்போது இதைக் கொண்டு போய் அவனிடம் கொடுக்கும் நிலைமை இல்லை என்பதாலும் அமைச்சில் இருந்து வந்த படியால் ஏதும் முக்க்கியமாக இருக்கும் என்பதாலும் சமரனே அதை உடைத்துப் பார்த்தான், அதில் அவனுடைய அகதி அந்தஸ்த்து மறுக்கப் பட்டிருப்பதாகவும் அவன் நாட்டில் இப்போது பிரச்சனை தணிந்து விட்டதால் அங்கே போவதால் அவனுக்கு எந்த வித உயிராபத்தும் இல்லையென்றும் விரும்பினால் 15 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்யலாம் என்றும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மேன் முறையீடு செய்யாவிட்டால் நாடுகடத்தப் படுவார் என்றும் சொல்லப் பட்டிருந்தது.
இந்த நாட்டைப் பொறுத்தவரை அதிகாரிகளின் முடிவையே அதிகமாக நீதி மன்றம் கவனத்தில் எடுத்திருக்கிறதென்பதால் இந்தக் கடிதம் Deportation Order க்கான ஒரு
முன் ஆயத்தம் தான் என்பதை அவர்கள் அகதி அந்தஸ்த்து கொடுப்பதற்கு மறுத்துச் சொல்லி இருக்கும் காரணங்களை வைத்து சமரன் புரிந்து கொண்டான். தாவூத் இருக்கும் மன நிலையில் இதையும் எப்படிக் கொடுப்பது? கொடுக்காமலும் இருக்கமுடியாது ஏனென்றால் இரெண்டு கிழமைக்குள் வழக்கறிஞரைச் சந்தித்து மீண்டும் இந்த முடிவை மறுக்கும் வகையில் இவன் இனி நாட்டுக்குப் போக முடியாதென்பதற்கு சரியான காரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும், நாட்டில் இவன் பற்றி வந்த பத்திரிகைச் செய்திகளை எல்லாம் எங்கெங்கோ எல்லாம் தேடி எடுத்து முறையான இடத்தில் மொழி பெயர்த்து தாவூத்தின் மனைவி தான் இது நாள் வரை அனுப்பிக் கொண்டிருந்தாள், இப்போது தாவூத்துக்கு அவளதும் மகனதும் இறப்பைத் தான் காரணமாகக் காட்ட வேண்டி இருக்கப் போகிறது.  சோமாலியாவில் ஒரு சான்றிதழ் எடுப்பதென்றால் மிகவும் சிரமம் நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டும், என்று தாவூத்  சொல்லி இருக்கிறான். தவிரவும் அவர் தன் இயக்கத் தொடர்புகளை இதற்கெல்லாம் பயன்படுத்தவும் விரும்பமாட்டான். இப்படியாக தனக்குள்ளேயே பேசிக்கொண்டு சமரன் அறைக்கு வந்தான், அழுது களைத்துப் போய் தாவூத் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

விடிந்து விட்டது மாலையில் எழுந்து பேசுவோம் கண்ணைச் சுழட்டுகிறது நான் தூங்கப் போகிறேன் அவனை ஒரு இடமும் தனியே விட வேண்டாம், பார்த்துக் கொள்ளுங்கள் என்று மற்றைய இரு நண்பர்களிடமும் சொல்லி விட்டு சமரன் தூங்கி எழுந்து பார்த்த போது வழமைக்கு மாறாக நண்பர்களுடன் போய் அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கிறான் போல நாற்காலில் அங்காலும் இங்காலுமாக சரிந்தபடி பெரு மழைக்குப் பின்னர் குளைகளில் இருந்து வழிகின்ற நீரைப் போல துளித்துளியாக கண்களில் இருந்து நீர் உருண்டு விழ ஸ்கைப்பில் இருந்த தன்னுடைய மனைவி மகனது படங்களை தாவூத் பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான், இப்போது கடிதம் பற்றி எதுவும் சொல்ல வேண்டாமென மற்றைய இரு நண்பர்களும் சமரனுக்கு கண்ணால் ஜாடை காட்டினார்கள், மறு நாள் காலை சமரன் மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்த போது, எல்லாவற்றுக்கும் ம் ம் எனத்தான் தாவூத் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்
பேச்சினிடையே உனக்கு குடிவரவுத் திணைக்களத்திடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது, பிரச்சனை இல்லை மேன் முறையீடு செய்ய வேண்டும், வெளிக்கிடன் இருவருமா சட்டத்தரணியிடம் போவோம் சமரன் மெதுவாகச் சொன்னான். எதுவும் பேசாமல் கடிதத்தைத் தரச் சொல்லிக் தாவூத் கையை நீட்டினான். வேகமாக ஒவ்வொரு பக்கமாகத் தட்டி வாசித்தான், சமரனைப் பார்த்து கண்ணைச் சுருக்கி உதடுகளைத் திறக்காமல் வெறுப்புக் கலந்த ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அப்படியே கடிதத்தைத் தூக்கி சுவரில் வீசி அடித்தான், கடிதம் பற்றி எதுவும் இனித் தன்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி விட்டு முகாமில் நின்ற ஆடையுடனேயே புறப்பட்டு வெளியில் போய் விட்டான், அதன் பின் ஒவ்வொரு நாளும் வரும் போது நிறை வெறியில் தான் வருவான், அவ்வளவாகச் சாப்பிடுவதும் இல்லை, அரசியல் பேச்சுக்களிலும், நக்கல்களிலும் கலகலவென இருந்த அந்த அறை எதையோ பிடித்து் இழுத்து நிறுத்தி விட்டதைப் போல அமைதியாகவே இருந்தது, அவனில்லாத நேரத்தில் தான் நண்பர்கள் ஏதும் பேசுவர்கள், ஆனாலும் முந்தின கலகலப்பு இப்போது இல்லை, அவனுக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 15 வேலை நாட்கள் நெருங்கிக் கொண்டே இருந்தது, தாவூத்துக்கு அதில் எந்த அக்கறையும் இல்லை, வியாழக்கிழமை அவன் மகனின் 7 வது பிறந்த நாள் அவனுக்கு அனுப்புவதற்கு  பொலிசிடம் பிடிபடாமல் களவாக போனமாசம் முழுக்க மிகக் குறைந்த ஊதியத்தில் இரவிரவாக மிகக் கடினமாக வேலை செய்து கொஞ்சப்பணம் சேர்த்து வைத்திருந்தான். அந்தப் பணத்தில் தான் இப்போது தினமும் குடி, குறிப்பிட்ட நேரத்தில் வந்து சாப்பிடா விட்டால் முகாமில் சாப்பாடு கிடைக்காதென்பதால் எப்போதும் வெளியில் தாராளமாக வைக்கப் பட்டிருக்கும் சீஸும் முட்டையும் தான் அவனது குடிக்கு உணவாக இருந்தது, ஏற்கனவே உனக்கு பருத்த உடல் கொலொஸ்ரோல் வேறு சீஸ், கண்டபாட்டுக்கு கொழுப்பு சாப்பிடாதே என சமரன் பல முறை சொல்லியும் தாவூத் காதில் வாங்கவில்லை, மகனின் பிறந்த நாளன்று மிக அதிகமாகக் குடித்திருக்கிறான் போல கதவில் பொருத்தப் பட்டிருக்கும் மெஷினில் அதைத் திறப்பதற்காக பயன்படுத்தும் Card ஐ சரியாக அதற்குள்ளே போட முடியாமல் தள்ளாடி விழுந்து விட்டான். அடுத்து வந்த நாட்களிலும் இதே குடி தான் ஆனால் அழுவதோ கத்துவதோ இல்லை பேசாமல் வந்து படுத்து விடுவான்,

இன்றைக்கும் குடித்து விட்டுத் தான் வந்தான், மகன் பிறந்த நாளுக்கு அனுப்ப என வாங்கி இருந்த பார்சலை உடைத்து அதற்குள் இருந்த விளையாட்டுக் காரை வெளியில் எடுத்து கட்டிலில் உருட்டி உருட்டிப் பார்த்த படி  கட்டிலில் குறுக்குப் பக்கமாக கால் நீட்டி இருந்து கொண்டு அப்படியே பின்னால் உள்ள சுவரில் சாய்ந்த படி கண்களை மூடிக் கொண்டு விசும்பிக் கொண்டிருந்தான், நேரம் ஆகிக் கொண்டிருந்தது இப்பதான் வந்த படியால் சாப்பிட்டிருக்க மாட்டான், கீழே ஏதும் இருந்தால் வாங்கி வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லி விட்டு சாப்பாட்டைச் சூடு காட்டி மேலே எடுத்து வந்து சாப்பிட்டுப் படு தாவூத் என்று சமரன் சாப்பாட்டை நீட்டினான். எதுவுமே பதில் பேசவில்லை விசும்பல் கூட நின்றிருந்தது, போகும் போது இருந்ததைப் போலவே அப்படியே கண்களை மூடி கால் நீட்டி சுவரில் சாய்ந்திருந்தான், இரெண்டு மூன்று தடவை சாப்பிட்டுப் படு என்று சமரனும் நண்பர்களும் சொல்லியும் அவன் பதிலேதும் சொல்லாமல் அப்படியே சாய்ந்திருந்தான், சாப்பாட்டுக் கோப்பையை அவன் கட்டிலுக்கு முன்னுள்ள மேசையில் வைத்து விட்டு சரி உனக்கு விரும்பின நேரம் எழும்பிச் சாப்பிட்டுப் படு என்று சொல்லி விட்டு கைத்தொலைபேசியில் மெளனத்தில் விளையாடும் மனச் சாட்சியே பாடலை சமரன் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். தூக்கம் வருகிறது விளக்கை அணைக்கட்டுமா காலையில் நேரத்துக்கு எழுந்து போக வேண்டும் என் லெபனான் நண்பன் கேட்டான், சரி அவன் பசித்தால் சாப்பிடுவான் தானே என விளக்கை அணைத்து விட்டு எல்லாரும் படுத்து விட்டார்கள்

சமரனுக்கு தூக்கம் வரவில்லை, அங்காலும் இங்காலுமாக திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தான், நேரம் காலை 3 மணி ஆகி விட்டது,  தண்ணீர் குடிக்க எழுந்த சமரன் எதேச்சையாகப் பார்த்த போது இன்னமும் படுக்காமல் தாவூத் அப்படியே சுவரில் சாய்ந்தபடியே இருந்தான்,  மனசு கேட்காமல் படுக்கையால் எழுந்து கம்பளிப் போர்வையைப் போர்த்திய படியே அவன் பக்கத்தில் சென்று சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை, சரிந்து கட்டிலில் ஒழுங்காப் படு என்று சமரன் அவன் தோளைப் பிடித்தான். தலை இடது பக்கம் சரிந்தது, குடித்து விட்டு வந்தாலும் தாவூத் இப்படித்தான் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பான் என்றாலும் இன்றைக்கு ஏனோ சமரனுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது
மின் விளக்கைப் போட்டு எழும்புங்கள் என்று மற்ற நண்பர்களைப் பார்த்துச் சத்தமிட்டான் தன்னுடைய இனத்தில் யாரும் இறந்து விட்டால் குரங்குகள் எப்படி அங்காலும் இங்காலும் ஓடி மூக்கில் கைவைத்தும் நெஞ்சில் காதை வைத்தும் பார்க்குமோ அது போலவே அவர்கள் மூவரும் மூக்கருகில் கைவைத்தும், நெஞ்சருகில் காதுவைத்தும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  999 எண்ணுக்கு நண்பன் ஒருவன் அழைக்க சிறிது நேரத்தில் மருத்துவரும் பொலிசும் வந்தார்கள்

நெஞ்சில் அமுக்கியும் வாயில் ஊதியும் என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்த மருத்துவர் பொலிசாரத் திரும்பிப் பார்த்து கீழுதட்டை வெளியே பிதுக்கி இமைகளை மூடித் திறந்தார், வந்திருந்த நான்கு பொலிசாரும் தொப்பியைக் கழற்றினார்கள். குடிவரவுப் பொலிசாரும் வந்து விட்டார்கள், செய்தி அறிந்த முகாமில் உள்ள அத்தனை பேரும் கூடி வந்து வாசலில் நின்றார்கள், தமக்கும் கூட இங்கேயே இப்படி நடந்து விடலாம் என்கிற மரணபயம் அவர்கள் முகத்தில் நிழலாடிக் கொண்டிருந்தது, அவர்களிடம் நடந்தவை பற்றி விசாரணை எடுத்து விட்டு தாவூத்தின் உடலை ஸ்ரெச்சரில் வைத்து அறைக்கு வெளியே கொண்டு போவதற்காக பொலிசார் தூக்கிய போது கோபம் மிகுந்த தொனியில் ‘உங்கள் குடிவரவுப் புலனாய்வு அதிகாரிகள் மிகவும் சிறப்பாகப் பணி புரிகிறார்கள், இனி இவனை உங்கள் விருப்பப் படியே எந்தப் பிரச்சனையும் இன்றி நாடு கடத்தலாம், என சமரன் கத்தினான். அது மட்டுமே அப்போது அவனால் முடிந்தது, உடலை அவர்கள் தூக்கிக் கொண்டு போய் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்ற அதைப் பார்த்து அழுதபடி முகாமே வாசலில் கூடி நின்றது, அவன் உடலோடு வண்டி புறப்பட்டு விட்டது

பூமியின் ஏதோ ஒரு கண்டத் தகட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்த தாவூத்தும் இன்னொரு கண்டத் தகட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்த சமரனும் அவர்கள் எதிர்பார்த்திராத வேறொரு கண்டத் தகட்டின் எங்கோ மூலை ஒன்றில் சந்தித்து பழகிய நட்புறவின் கதை இன்றோடு முடிந்து விட்டது

யாரும் எதுவுமே பேசாமல் அவரவரின் அறைகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள், சமரன் தன்னுடைய அறைக்கு வந்த போது முகாம் நிர்வாகம் தாவூத்தின் படுக்கை உறை, தலையணை உறை என்பவற்றைக் கழற்றிக் கொண்டிருந்தார்கள், அவனுடைய பொருட்கள் எதுவும் வேண்டுமானால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள், தாவூத் தன் மகனுக்கு அனுப்புவதற்கென வாங்கி கடைசியாகக் கட்டிலில் உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காரை சமரன் எடுத்து வைத்துக் கொண்டான் . ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டார்கள், எடுத்தது போக மீதிப் பொருட்களையும், அவனது ஆடைகளையும் குப்பைகள் போடுகின்ற கறுப்புப் பையுள் போட்டு முகாம் நிர்வாகம் எடுத்துச் சென்றது, தாவூத்தின் ஸ்கைப்பில் அவனது மகன், மனைவியின் படங்கள் இனிக் காலாகாலத்துக்கும் அப்படியே திறக்கப் படாமல் கிடக்கும்

சமரனுக்கு தூக்கம் வரவில்லை,மற்றைய இரு நண்பர்களும் ஏதும் பேசாமல் முகத்தை போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு படுத்திருந்தார்கள், அவன் படுத்திருந்த கட்டிலைப் பார்க்க முடியாமல் சமரன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான். ஏதோ யோசினையில் சற்று அசந்து விட்டு திடுக்குற்று முழித்த அவன் மனசு கேட்காமல் தாவூத் கட்டிலைத் திரும்பிப் பார்த்தான். அதில் புதிதாக வந்த இன்னொரு அகதி படுத்திருந்தான், அவன் மிக இயல்பாகத் தூங்கிக் கொண்டிருந்தான், தாவூத் படுத்திருந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே முகாம் நிர்வாகம் இன்னொரு அகதியை அதில் போட்டிருக்கிறது, ’காலம் எப்போதுமே இப்படித்தான் எதுவுமே நடவாதது போல இடைவெளிகளை மிக வேகமாக இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கும்’

 உள்ளங்கையால் நெற்றியில் இறுக்கி அடித்து விட்டு சமரன் மீண்டும் திரும்பிப் படுத்தான். என்றோ ஒரு நாள் எனக்கும் இப்படி ஏதும் இங்கேயே நடந்து விடலாம் என்ற எண்ணம் அவனுக்குள் ஓடத்தொடங்க இதயம் மீண்டும் வேகமாக அடிக்கத் தொடங்கியது ஆனால் முன்னரைப் போல அவன் பயந்து எழுந்திருக்கவில்லை, மூக்கிலிருந்து கசியும் ரெத்தம் துளித் துளியாக படுக்கை உறையிலும், தலையணையிலும் விழுந்து கொண்டிருந்தது, அதை எழுந்து துடைக்கவோ கண்ணாடியின் முன்னால் போய்ப் பார்க்கவோ சமரன் விரும்பவில்லை. மூளையும் மனமும் தனித் தனியாகக் கழன்று விட்டது போல அப்படியே அசையாமல் சுருண்டு படுத்திருந்தான்...

பித்தனின் காதற் பிறை..

இல்லாதவற்றால் எழுந்து
இருக்கின்ற வானம் போல்
சொல்லிவிடாக் காதலதன்
சுமை நிறைந்த வார்த்தையைப் போல்
எல்லையைக் கடந்துருவாய்
எங்கோ நீ இருந்தாலும்
சில்லுக்குள் சில்லாக
சிறகடித்துச் சுற்றி என் முன்
படிமமாய் உரு ஆகிப்
படர்கின்றாய் என் மேலே

துடிப்பின்னும் தொடர்ந்தாலும்
துவண்டுவரும் நாடியதன்
பிடிப்பற்றுப் போகின்ற
பேதமுறு ஒலியைப் போல்
மெதுமெதுவாய் மெளனத்தை
மிகை நீட்டி உயிருறவு
அதுவாக அறுந்து விழ
ஆனவரை முயலுகிறாய்

எக்கி என்னுள்ளே வைத்திருக்கும் உன் நினைவு
திக்கு முக்காடித் திணறுதடி முடியாமல்

விக்கினால் தும்மினால் வேதனை விம்மினால்
அக்கறையோடு எண்ணுறாய் என்று தான்
இக்கணம் வரை நான் நம்புறேன், நம்பியே
எக்கனம் தலையிலே ஏறினும் மீண்டு நான்
சிக்கலை அறுத்துச் சினம் தணிந்தடங்குறேன்

எத்துணை தொலைவிலே நீ இருந்தாலும்
எத்துணை அருகிலே இருக்கிறாய் என்பதை
இத்துணை வார்த்தைகள் சொல்லுதோ அறிகிலேன்
செத்தெனைச் சொல்லவும் சித்தமாயிருக்கிறேன்
பித்தனின் காதற் பிறைதனை அன்பொடு
முத்தத்தோடுனில் சூட்டிட மாட்டியோ..

Tuesday 15 May 2012

மகனெழுதும் கவிதை மனத்துள்..

என்னை நீ தூக்கி வைத்திருக்கும் நிழற்படத்தில்
உன்னோடு ஒரு காலம் இருந்திருக்கேன் என மகிழ்வேன்

ஆறாம் மாச ஊசி எனக்கடித்த நாளன்று
கூறாமல் போனாயாம் எங்கேயோ, பின்னருனை

கடல் தாண்டி வந்தேதோ கட்டட இருட்டறையின்
கம்பிகளின் பின்னால் நான் கண்ட நினைவிருக்கு

எட்டி எனைத் தொட்டுப் பார்க்க நீ எத்தனித்தாய்
முட்டி விடும் என நானும் முயன்று கை நீட்ட

தட்டி விட்டான் ஒருவன் தள்ளியுனை உதைத்து விட்டான்
பட்டமரம் போல வீழ்ந்தாய் அம்மாவும்

கட்டி எனைப்பிடித்துக் கண்கலங்க, புறப்பட்டோம்
குட்டி என நீ கூப்பிட்ட குரலின்னும்

தட்டுப்பட்டபடி கிடக்குதுள்ளே, இன்றைக்கு
எட்டாத தூரத்தில் எங்கேயோ உள்ளாயாம்

கணணித் திரையில் நீ கண் சிவந்தபடி இப்போ
அணைக்கக் கை நீட்டி அழைப்பாய் நானும் தான்

காற்றில் வெறுங்கையைக் கட்டி எம்மை நாம்
தேற்றிக் கொள்வதிப்போ தெரிகிறது, அப்பா நீ

ஊட்டி விடுவாய் உங்கிருந்து, ஆக்காட்டி
நீட்டுவேன் என் வாயை நீயும் தான் ஆவென்பாய்

ஆளாளை ஏமாற்றல் அறிந்தும் வெறும் வாயை
அசைபோட்டு மென்றெம்முள் ஆறுதல் கொள்ளுகிறோம்

பெற்றோர் சந்திப்பு என்றால் பள்ளியிலே
மற்றக் குழந்தைகட்குத் தந்தை தாய் வந்திருப்பார்

எனக்கு மட்டுமிங்கே எப்போதும் அம்மா தான்
மனம் கனத்து நானுன்னை வாவென்று அடம் பிடித்தால்

இனிப்புப் பை அனுப்பி ஏமாற்றி விடுகிறாய் நீ
எனக்கின்னும் விளங்காததிது தான் எங்கேயோ

இருக்கின்றாய் இருந்தும் ஏன் வீட்டை வருவதற்கு
மறுக்கின்றாய் என்ற மர்மம் தான்? விரைவாகப்

பார்ப்போமெனத் தினமும் சொல்லுகின்ற அம்மாவின்
நீர்த்தின்னும் போகாத நெடுநாள் வார்த்தைகளைப்

போர்த்தபடி நானுறங்கிப் போகின்றேன் என்றைக்கோ
சேர்வாய் எனை என்னும் சிறு கனவின் தாலாட்டில்...

உனக்கான அருகதை..

காட்டாறு
எங்கள் வேர்கள் பற்றி உள்ள
கரையை அரிக்கத் தொடங்கிய போது
விழுதுகளை இறக்கி
விழாமல் நின்று கொண்டு
வேர் வலைகளை விரித்து
மண்ணை இறுகப் பற்றினோம்
அப்போதில்
பக்கவேராகக் கூட நீ
பங்களிப்புச் செய்திருக்கவில்லை
வேரோட்டம் பற்றி மட்டுமே
விமர்சித்துக் கொண்டிருந்தாய்

காட்டாற்றின் பலவந்தம்
கேட்பாரற்று உள் நுளைந்த போது
வேர்களால் கற்களைக் குடைந்து
வேகத் தடைகளைப் போட்டோம்
உயிர் கொடுத்து
பாதையைக் கூட அடைத்தோம்
அப்பொழுதில் நீ
கழிவறையில் பொழுது போக்காகப் படித்த
காலாவதியான கோட்பாடுகளுக்குள்
வேகத்தடை முறைமை வரவில்லையென
காட்டாற்றின் அருகில் நின்று
கத்திக் கொண்டிருந்தாய்

காட்டாறு மட்டுமே எனில்
கையாண்டிருப்போம் நாம்
எமக்கான நிலப்பரப்பை
எமதாக்கி வைத்திருப்போம்
கண்டத்தகடு பிளந்து
கடல் புகுந்த போது தான்
ஊட்டம் குறைந்து உடைந்து போனோம்

ஒவ்வொரு வேர் வேராய்
உயிரறுந்து போம் போதும்
அவ்வளவு ஓலங்கள் அழும் போதும்
காட்டாற்றை நோக்கி
ஓர் கல் கூட எறியாத நீ
எப்படிப் போராடுவதென்று
எமக்குச் சொல்லித் தருகிறாய்

இப்போதில்
நாம் சிதைக்கப்பட்ட காட்சியை
மிக ரசித்து
மாலைத் தேனீராய் சுவைத்துக் குடிக்கிறாய்
குடி

சிதைந்த காயத்தால் இன்னும்
சீழ் ஊற்றி வரும் நிலையில்
அதைச் சொல்லிச் சொல்லி
ஆனந்தக் கூத்தாடுகிறாய்
ஆடு

கந்தக வாசனையே
கண்டிரா உன் மூக்கால்
கட்டமைப்பின் பிழை என்று
கத்தித் திரிகிறாய்
கத்து

ஒன்றை மட்டும் புரிந்து கொள்

விருட்ச இருப்பின் விதைகள்
மண்ணில் மட்டுமல்ல
மனசிலும் முளை விட்டிருக்கிறது
மண்ணில் விருட்சம் மரித்தது போலிருந்தாலும்
மனசில் விருட்சம் மரணிப்பதே இல்லை
மனசின் அகக் காட்சி தான்
மண்ணின் யுகக் காட்சி
அது
தேவை தீரும் வரை
திரும்பத் திரும்ப எழும்..

கற்றாழை இதயம்..

இலை துளிர்த்தும் அது உதிர்ந்தும்
பனி படர்ந்தும் அது கரைந்தும்
பூ மலர்ந்தும் அது விழுந்தும்
பருவங்கள் ஆண்டுகளாய்ப் பல ஓடி
என்றோ ஓர் நாளில்
நாம் சந்திக்கின்ற போது
உன்னுடைய பழையவனாய்
நான் இல்லாமற் கூடப் போகலாம்

உன் நினைவுகளின் ஈரப்பதன்
குறையாமல் இருப்பதற்கு
என் நெஞ்சின் ஈரத்தை
ஆண்டுகளாய் இறைத்து முடித்து விட்டேன்

உன் நினைவுகளுக்காக மட்டுமே
செலவழிக்கப்பட்ட என் மூளைச்செல்கள்
புதையுண்ட ராஜதானியில் இருந்து
எடுக்கப்பட்ட கல்லைப் போல
ஆயிரம் கதைகளைச் சுமந்தபடி
வெடித்துப் போய்க்கிடக்கிறது

செல்களில் உறைந்துள்ள
நினைவுகளைப் பிரித்தெடுக்கும்
தொழில் நுட்பத்தை
நீ வரும் அந்த நாளில்
யாரேனும் கண்டுபிடித்திருந்தால்
உன் பற்றிய
என் நினைவின் வார்த்தைகளை
உயிர் ததும்பும் ஓசைக் கவிதையாக
ஒரு வேளை
உன்னால் படிக்க முடியலாம்

கிணற்றடி வாழையின் பசுமையாய்
உனிலன்று படர்ந்திருந்த நான்
இன்று
ஆற்றோட்டம் நின்று போன நிலமாய்
வெடித்துப் பிளந்து போயிருக்கிறேன்
ஆயினும்
நீ என்னைக் காணப்போகும் அந்த நாளில்
என் கற்றாழை இதயம்
மனத்தரிசில் தன்னைப் பிழிந்து
ஆவி உயிர்ப்பை அகத்துறிஞ்சி
நெகிழ்ந்து குழைந்துருகி நீராகி
காதலைத் துமிக்குமடி
கண்ணில்..

பறப்பின் தாகம்..

கட்டளைகள் எதுவுமே காதிற்
படாமலுக்கு
வெட்டவெளி கிழித்து விண் குளித்து
வீறாக
பொட்டல் வெளி கடல் மலைகள்
பொருட்டாகத் தோன்றாமல்
திட்டமிட்ட இலக்கின்
திசை நோக்கிப் பறக்கின்ற
களைப்பறியாப் பறவை ஒன்றின்
காத்திரச் சிறகாக
இளைத்து நான் சோர்ந்து
இருந்திடமுன் எனையாக்கு

ஆவியள்ளும் கண் சிமிட்டில்
அசைத்துருக்கும் பாடலதில்
பாவி என் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்ற
பாசாங்கறியாத பால் வாயின் சிரிப்பொலியில்
பட்டுண்டு என் நெஞ்சம் பலவீனமாகுமுன்னர்
பாசம் எனும் வேர் படராத பாதை வழி
கட்டுப்பாடிழக்காமல் காலை நடக்க விடு

செம்பால் வழிந்தோடிச் சிவந்த
எம் பயணத்தை
வம்படித்துப் பேசுகின்ற வாய்களுக்குப்
பதில் சொல்லி
என் பலத்தைச் சிறிதேனும் இழந்து விட
வைக்காதே
இன்னும் நெடும்பயணம் இருக்கிறது
அதனாலென்
கண் வாய் காது பொத்திக் காப்பாய்
என் சக்தியினை

நீண்டு செலும் நள்ளிரவின்
நெடுவான வெளியொன்றில்
தோன்றவுள்ள விடிவெள்ளி தொலைவிலில்லை
அதை நோக்கி
அடித்து நான் பறக்கும் அற்புதத் தினம்
வரையில்
துடிக்கவை என் நெஞ்சை துவண்டு விட
ஒப்பாதே

என் பறப்பின் தாகம் எதுவென்று
நீ அறிவாய்
மண் தாகமும் அது தான் மனதிருத்து
விடுதலையே..

இயக்கிய வார்த்தைகள்..

எப்படியோ எவ்விதியோ எதிர்பார்க்கா இடமொன்றில்
ஏற்பட்ட ஒரு சின்னச் சந்திப்பு வளர்ந்தோடி
இப்பிறப்பில் என்றைக்கும் எதுவந்தும் மறக்கேலா
இறப்புவரை வரப்போகும் இத நினைவாய் ஆனதடி

சேர நாட்டினது செழுங்குளுமைத் தளதளப்பு
சிந்தாமற் சிந்தியெனைச் சிலிர்க்க வைக்கும் விந்தையுந்தன்
ஓர விழிப்பார்வையிலே ஒழுக புன்சிரித்தாய்
உயிருருகி ஓடி அப்போ உன் காலை நனைத்ததடி

என்னிலமை தானுனக்கும் இருந்திருக்கும் ஏனென்றால்
எப்படியோ ஓர் பேச்சை எடுத்தாய் எமைச் சுமந்து
தன்னுடைய பாதை வழி போகின்ற புகையிரத
தாளில்லாச் சாளரத்தைத் தாண்டுகின்ற ஊர்களைப் போல்
எமைக் கடந்து சென்றுவிட்ட எமதெமது வாழ் கதையை
எமையறியாதெமக்குள் நாம் ஏன் தானோ பகிர்ந்து கொண்டோம்

ஊரொன்றில் நீயிறங்கிப் போனாலும் அதன் பின்னர்
உன்னை நான் ஒரு போதும் காணவில்லை என்றாலும்
தீராத எம்பேச்சுத் தீரவில்லை ஊடகத்தால்
தேசங்கள் கடந்தலையாய் தினம் பேசித் திரிந்ததடி

எத்தனை மலைகடல் கடந்திருந்தாலும்
எத்துணை அருகில் நாம் இருந்துகொண்டிருந்தோம்
இத்தனை காலம் நாம் இயக்கிய வார்த்தைகள்
இனி வரும் காலமும் இயங்கிடும் கேளடி!

பேச்சறுந்த இந்தப் பெரும் மெளனக் காலத்துள்
நீச்சலடிப்போமெம் நினைவுகளில் என்றைக்கோ
மூச்சறுந்து போகுமுன்னர் முன்னரைப் போல் பயணமொன்றில்
முதுமை வந்திருந்தாலும் முயன்றேனும் கண் விரித்து
ஆளாளை எப்படியும் அடையாளம் கண்டிடுவோம்
அதுவரையில் சுகமாக நீ வாழவேண்டுமடி நிம்மதியாய்..

Tuesday 24 April 2012

நானெனும் ஓரலை..

ஆண்டுகளாய் வாழ்ந்தின்று
அடி பெயர்ந்து வீழ்ந்துள்ள
நீண்ட பெருமரத்தின்
நினைப்பில் படாதின்னும்
உயிர் தக்கவைத்துள்ள
ஓர் கிளையின் இளந்தளிர்
நான்

ஆழ்ந்தடங்கிப் போயுள்ள
அடரிரவில் எங்கேயோ
பாழ்விதியை நொந்தழுது
பதைபதைப்பிற் கூவுகின்ற
பறவைக் குரலலையின்
படபடக்கும் ஓரிழை
நான்

முட்டுகின்ற தொடுவான
முடிவிலிருந் தெழும்புகின்ற
வட்டச் சூரியனில்
வழிகின்ற விடியலின் மேல்
பட்டுவிட எத்தனித்துப்
பறக்கின்ற ஓரலை
நான்

எதற்குள்ளோ எங்கோ
எப்போதோ இட்ட முட்டை
அதற்கான காலத்தில்
அவிழ்ந் துயிர்க்கும் அந்நாளும்
எப்போது வருமென்று
எண்ணி அந்த வானத்தைத்
தப்பாமற் தினமேங்கித் தவிப்போடு பார்த்தபடி
அப்பாலே கடலில்
அசைகின்ற ஆமையைப் போல்
இப்பாலே காத்திருந்து
இயங்குகிற ஓர் மனம்
நான்..

தேற்றும் நினைவுகளின் தோற்றம்..

ஓட்டுக்குள் நத்தை போல்
ஒழித்திருந்த உன் நெஞ்சம்
பாட்டமாய்ப் பெய்கின்ற
பருவ மழை ஈரத்தில்
மூசித் தீப்பிடித்து
மூச்செல்லாம் மோக அலை
வீசி அடித்துள்ளே
விண் கூவ, விரக மணம்
நாசிக்குள் படர்தெங்கும்
நனைக்க, என் மனசின்
வீட்டுக்குள் மெல்ல
விரைந்தூரத் தொடங்குதடி

உந்தனது மன ஆசை
ஊர்ந்து வரும் வழியெங்கும்
சிந்துதடி வீணீராய் இழுபட்டு
சிலிர்த்த மன
எண்ணச் சுவர்தனில் நீ
ஏறுகையில் ஈரலிப்பு
திண்மைக் கர்வத்தின்
தீராத வெம்மையினை
தண்மைப் படுத்தித்
தணிக்குதடி, நாடிகளை

கவ்விக் கவ்வி நீ
கடக்கையிலே சூடாக
இவ்வளவும் இருந்த
ஏதேதோ கோபமெல்லாம்
அவ்வளவு அழுக்கும்
அகன்று குளிராகி
தவ்வுகின்ற குழந்தை போல்
தவழுதடி உன் முன்னே

உணர் கொம்பை நீட்டி
உண்மை மனசு தனை
உணர்ந்திட்ட உன் நெஞ்ச
உறவின் நினைவலைகள்
என்றைக்கு மீண்டும்
ஏறும் முருங்கை மரம்?
என்றைக்குத் தன்னை
இழுத்தடக்கும் ஓட்டுள்ளே?

என்றைக்கு என்னால்
உனையறிய முடிகிறதோ
அன்றைக்கே நானுலகை
அறிவேன், அதுவரையில்
சென்று வா நினைவே
சீக்கிரமாய், என் எழுத்து
நின்று விட வேண்டாமா
நிலைத்து..

உரமாக்கப் போகின்றாய் உனக்கு..

உன்னினைவுப் பார்வையினில்
ஒழிப்பதற்காய் விரைவாக
என்னால் இயன்றளவும்
இழுத்தோடி தெருத்தெருவாய்
பாய்ந்து கடந்து படபடக்கப்
பதுங்கி மெல்ல
எனைத் தொடர்ந்த படியா நீ
இன்னும் வருகின்றாய்
எனத் திரும்பிப் பார்த்தால்
என் முதுகின் பின் அப்படியே
பார்த்தபடி தொடர்கின்ற
பாழ் நிலவினைப் போல்
வேர்வை மணம் சொட்ட
விம்மலுடன் உடல் சிதைந்து
படிம உருவாக என் முன்னே
படர்ந்து, நானும்
ஊரைத் தேசத்தை
உப கண்டம், கண்டத்தை
ஓடிக் கடந்தும்
ஒற்றன் போல் என் பின்னால்
தேடி வருகின்ற என்
தேசப் பளிங்கே பார்..!

தூரம் கடந்தோடத்
துடிப்பின்னும் கூடுவதை
ஆரிதயம் இப்படியாய்
அடிக்கிறது? நெஞ்செரிந்து
ஊரெரிந்த வெக்கை
உள்ளே கொதிக்கிறதே
என் பின்னால் ஓடி நீ
இவ்வளவும் வந்து விட்ட
களைப்பா இப்படியாய்
கடகடென்று அடிக்கிறது
ஒருவேளை
உன் துடிப்பா என்னுள்
ஒலிக்கிறது இல்லையெனில்
என் துடிப்பா உன்னுள்
ஏனெனிலோ துடிப்புகளுள்

கையறு நிலையில்
கையறுந்து வீழ் நிலையின்
ஒப்பாரி கூச்சல்
உடைந்தலறி விழுகின்ற
உயிர் கதறும் ஓசை
உஸ்ணப் பெரு மூச்சு
வார்த்தைகளில் வர முடியா
வதையின் கொடுமைகளை
கையிரெண்டால் மண்ணள்ளிக்
கசக்கி முனகுகின்ற
காதுச் சவ்வறுந்து
கலங்கடிக்கும் ஈனஸ்வரம்
நெஞ்சின் செவிப்பறையில்
நெருப்பூற்றி கருக்கிறதே
காலிரெண்டும் நடுங்க
கட்டறுந்த கை நரம்பு
ஓலத்தில் உதறுகின்ற
உயிர் வதையைத் தாங்காமல்
நெஞ்சு முடி பிய்த்து
நெடுஞ்சாணாய் வீழ்கிறதே

ஒற்றைக் காலூன்றிச்
சிவர் மேலே சாய்ந்து நின்று
உள்ளிழுத்துப் புகையை
ஊதி, பெண்களினை
ஓரத்தால் பார்க்கின்ற
ஊன் தேவை அறுந்தின்று
பால் வேறு பாடெரிந்து
படர்கிறதே பார்வைகளும்
என்னைக் கடக்கின்ற
எவரேனும் எனக்கிப்போ
ஓர் நிழல் உருவாய்த் தான்
உள்ளே தெரிகின்றார்
பைத்தியமா எனக்கென்று
பார்க்காதே என் மண்ணே!
உந்தனது நடையின்
ஒவ்வோர் அடி வைப்பும்
எந்தனது காலுக்குள்
இப்பொழுதும் அதிர்க்கிறது

உன்னைப் பிரிந்தென்று
ஓரடியை வேற்றிந்த
மண்ணில் நான் வந்து
மரித்துப் போய் வைத்தேனோ
அன்றிருந்து உறவெல்லாம்
அறுந்தறுந்து ஒவ்வொன்றாய்
என்னைத் தனியாக
எறிந்து விட்டுப் போகிறது
முதல் வீழ்ச்சி கொஞ்சம்
மூச்சடங்க வைத்தாலும்
அதுவே அடிக்கடியும்
ஆவதனால் பழகிப் போய்
பொது வாழ்வே எனக்குப்
பொருத்தமென்று ஆகிறது

மரமெனில் நிழலாய்
மனமெனில் நினைவாய்
கரமெனில் விரலாய்
கவியெனில் பொருளாய்
புகலிட மண் பனிப்
புகையாய் என் முனே
பூத்து மணக்குமென்
பூர்வீக தேசமே!
மரமாகப் போகுமென்
மனந்தனை மாற்றி நீ
உரமாக்கப் போகிறாய்
உனக்கு..

நிசம் உணர்ந்தணிந்த நெருப்பாடை..

நீறாவாய் என அறிந்தே
நெருப்பாடை தனை அணிந்தாய்
மாறாமல் நீள்கின்ற
மண்ணின் விதி இதனால்
தேறி விடும் எம்
திசையெங்கும் ஒளி சுடரும்
பாறி அடியோடு
படுகுழியில் வீழ்ந்துள்ள
விடியல், உனையெரித்தால்
வெளிக்கும் என உணர்ந்தே
வாழ்வை வசந்தத்தை
வழிந்தூறும் காதலினை
ஊழ்வினை எனச் சொல்லி
ஒதுக்கி குழந்தைகட்காய்
தகிக்கும் என் அறிந்தும்
தரித்தா யிவ்வாடையினை

என்றோ ஓர் நாளில்
எமக்கான கிழக்குதிக்கும்
அன்றைக்கு, அதன் முன்னே
ஆருயிரை நீ துறந்து
சென்றிடலாம், வெற்றிச்
சிறப்பதனைக் காண்பதன் முன்
கண் மூடி உன் காலம்
காலம் ஆயிடலாம்
என்றறிந்தும் எதற்காக
இதைத் தரித்தாய்? மகிழ்வாக
ஓடைக் குளிர்மலரின்
உணர்வொத்த ஆடைகளை
உன்னுடைய சந்ததிகள்
உடுக்கட்டும் எனத்தானே!

காலி முகத்திடலின்
கடற்கரையில், பூங்காவில்
வேலிக்கரையோரத்தில்
வீட்டிற்குப் பின் புறத்தில்
காது மடலுரசி
கன்னத்தை நனைய வைத்து
பாதி விழி செருகப்
பார்த்து இரு விரலால்
முதுகூசி தன்னை
முனகலுக்குள் கழற்றி விட்டு
எதுவோ சாதித்த
இறுமாப்பில் பல்லிளித்து
சுதி வாழ்வை உந்தனுக்கும்
சுகித்துவிடத் தெரியாதா?

வெடித்த குண்டுகளின்
வீச்சில் சிதறிப் போய்
துடித்துக் கொண்டிருக்கும்
துண்டுத் தசைகளிடை
சாதியினை மட்டும்
சரியாகப் பிரித்தெடுத்து
நாலு சொல்லு
பெண்ணியத்தை அதற்குள்
பிரட்டிக் குழைத்து விட்டு
மாற்றுக் கருத்தாளன்
என்கின்ற மறைப்புக்குள்
மாற்றானின் திட்டத்தை
மறைத்து மேட்டிமையில்
ஏட்டில் சுரக்காயென்றெழுதி
இது எங்கள்
நாட்டுக்குரிய நல்ல கறி
என்று சொல்லி
ஓட்டத் தெரியாதா
உந்தனுக்கும் வாழ்வதனை?

வாழ்வதற்கு உனக்கிங்கே
வழி இருந்தும் அதற்கான
வாழும் முறை தெரிந்தும்
வளையாமல் உன் வாழ்வை
சுளையாக இம் மண்ணின்
சுக விடிவுக்காகவென்று
பிழைக்காய் என அறிந்தும்
பெருங்கொடையாய்த் தந்து சென்றாய்

கழுத்தில் நஞ்சணிந்த சிவனாய்
களத்தில் நீ
எழுதி விட்டுச் சென்றதிங்கே
ஏராளம், சுய விருப்பில்
நெருப்பாடை தன்னை
நீயணிந்து கொள்ளவில்லை
உருப்படா நீசர்கள்
உனையணிய வைத்தார்கள்
கொம்புக்கு மண்ணெடுக்கும்
குணமில்லை உந்தனுக்கு
அம்புக்கு எதிரம்பு
அடித்தாய் அவ்வளவே

உன்னுடைய காலத்துள்
உய்யும் என எண்ணி
உன்னாலியன்ற வரை
உழைத்தாய் ஆனாலும்
தன்னுடைய காலமின்னும்
தாண்டவில்லை காலத் தீ
அடுத்து வரும் சந்ததியின்
அழகொழுகும் மேனிகளில்
உடுத்தி விட நினைக்கிறது
உன் உடையை, அவர்களுக்கும்
அதையணிந்து செல்வதற்கு
ஆசையில்லை, எதிரிகளாய்
அதையணிய வைத்தால்
அவர்களுந்தான் என்ன செய்வார்...?

கண்ணாடி முன்னின்று கதைத்தல்..

உனைச் சுற்றி இருந்தோர்கள்
ஒவ்வொருவராய் மெல்ல
தனக்கான வேளை வந்துவிட சிரித்தபடி
தலையாட்டி விடைபெற்றுப் போய்விடவும்
இப்போதில்
நீயும்,கவிதைகளும் நெடுமூச்சு வளர்கின்ற
நினைவுகளும் மட்டும் எஞ்சிக்கிடக்கின்றீர்

எல்லோரும் போய் உன்னை
ஓர் புறத்தில் தனியாக
சொல்லாட விட்டு விடும்
சுகம் உனக்கும் பிடிக்கும் தான்

எதை நினைத்துக் கொண்டிப்போ
இருக்கின்றாய் என்பதுவோ
இதையிப்போ ஏன் நினைத்தாய்
என்பதுவோ இப்போதில்
உந்தனுக்கு ஏனோ ஒன்றும் புரிவதில்லை

எதுவோ ஒன்றை நீ
எண்ணுதற்குள் விரைவாக
அது உன்னைக் கடந்து
அப்பாலே செல்கிறது

எதற்காக நீ இப்போ
இரங்குகிறாய் என்பதுவோ
எதற்காகச் சிரிக்கின்றாய்
இடிகின்றாய் என்பதுவோ
உனக்கிப்போ ஒன்றும்
உறைப்பதில்லை, உன்னுடைய
கவலைதானென்ன? ஏன்
கலங்குகிறாய் என்பதுவும்
உனக்கே நிசமாக
ஒன்றும் தெரியாது

கண்கள் நிலைக்குத்தி
ககனத்தில் அலைகிறது
உன்னிதயத் துடிப்பை நீ
உணருகிறாய், தலைகோதும்
அன்பான ஓர் வார்த்தை
ஆறுதலாய்ச் சாய்ந்து விட்டு
தெம்பாக எழுந்திருக்கத்
தெய்வீக மடி ஒன்று
என்பாலும் வாராதா
என்றெண்ண அலைஅலையாய்
தன் பாலம் கடந்தவையும்
தாண்டி எங்கோ போகிறது

வெடித்தது போலுள்ளே
வீணிதயம் வலித்தாலும்
உடைந்து விடாதென்ற
உறுதி உனக்குள்ளே

உனக்கான ஓர் நாடு
உயிர் நீத்த வீரர்கள்
தனக்கான வாழ்வைத்
தவிர்த்து அவர் கொடுத்த
விலைகள், அதற்கின்னும்
விடையில்லை என்பதுவும்
உலைபோல ஒரு பக்கம்
உருகிக் கொதிக்கையில் நீ
மலை உடைந்து வீழ்வது போல்
மனம் வீழ்வாய், உனக்கிப்போ

வழங்கப்பட்டுள்ள வாழ்வினையும்
நீ கண்ட
வலிகள் நிறைந்தூறும்
வழிகளையும் என்னாலே
வாழ்க்கை என்ற சொல்லாலே
வரைந்து விட முடியவில்லை
வாழ்க்கை என்கின்ற
வலிமை நிறை சொல்லுக்குள்
போக்கறுந்த உன் வாழ்வு
பொருந்தாது ஆதலினால்

உன் போக்கைச் சொல்லுதற்கு
உரிய தகு சொல்லொன்றை
எனக்கான மொழியெங்கும்
இயன்றவரை தேடுகிறேன்
எப்படியும்
வார்த்தையை வனைந்தெடுத்து
வருவேன் அதற்குள் நீ
சோர்ந்துந்தன் ஆயுளுக்குச்
சோரம் போய் வீழாதே
சேர்ந்து வருவேன் நான்
சிந்தாதே அது மட்டும்
ஊர்ந்து போகும் உன்
உயிரை விரைவாக
ஓடிப் போவதற்குத் தூண்டாதே
வருவேன் நான்..

மனத்தின் பயணம்..

சாகாவரை மனதிற்
சஞ்சலங்கள் சஞ்சரிக்கும்
போகாது உயிரின் முன் புறப்பட்டு
நோகாமல்
இருந்தால் மனமில்லை அதன் பெயரும்
விட்டு விடு
வருந்திப் பின் வழிக்கு வரும்

வரும் நேரம் வாழ்க்கை
வசந்தத்தின் சாவிதனைத்
தருமென்று எண்ணிடுதல் தவறு
உருவழிந்து
வந்த தடம் கூட வழிகளிலே
இருக்காது
இந்த நிமிடந்தான் இனி

இனிக்காலம் எம்மை
எம்மை எதற்கும் தயாராக
தனிக்காட்டின் நடுவிற் தள்ளி விடும்
நுனிப் புல்லில்
பனித் துளியாய் வாழ்வு பழகி விடும்
தன் வாழ்வை
தனித்துணையாய் கொண்டு தான்

தானென்ற தன்மை
தாண்டு விட இவ்வருகை
ஏனென்ற கேள்வி எழுகையிலே
வானென்ற
அகண்டவெளி வீடாகும்
ஆகும் மனமது போல்
இகம் பரமொன்றாகும் இதம்

இதத்தை இன்மையினை
எதனையுமே உணராத
பதத்தில் மனமான பருத்திப் பூ
மிதந்தபடி
வெளிக்கப்பால் வெளிகடந்து விரைய
அன்பென்ற
ஒளிக்கப்பல் உனையேற்றும் உள்

உள்ளே ஒளி கசிய
உணர்வெழுந்த சித்தார்த்தன்
தள்ளி அரியணையைத்
தவிர்த்தான் தான் ஆனாலும்
அரசவையின் பொறுப்பை
அதன் சுவையை உணர்ந்திட முன்
தெரிந்தவன் சொல்லி வைத்த
தெளிவான சொல்லை விட

ஆண்டு அனுபவித்து
அதன் சுவையை உணர்ந்து வெற்றி
பூண்ட பின்பும் அதைப்
புறந்தள்ளிப் போட்டு விட்டு
பேசாமற் சென்று விட்ட
பேரரசன் அசோகனவன்
பேசாத வார்த்தைகளே
பேருண்மை வழியாகி
ஓருண்மையாய் உள்ளே
ஒளிரும்..

Saturday 21 April 2012

சன்னம் வரைகிற வட்டம்..


விரலொன்று விசை ஒன்றைத் தட்ட
விர் என்று
விரைகின்ற குண்டொன்று மார்பொன்றை
துளைத்துப் பாய்கின்ற
துவாரத்தின் வட்டத்துள்
ஓர் வாழ்வு மட்டுமா
உடைந்து போய்க் கிடக்கிறது..?

பெயரற்றுக் கிடக்கின்ற
பிள்ளையைப் பெற்றவளை
பெயர் சொல்லப் பெற்ற
பெற்றவரின் பெருங்கனவும்,
கையொன்றில் அவளைக்
கவனமாய்ச் சேர்க்கும் வரை
கண் துஞ்சாதவர் உழைத்த
கடின உழைப்பதுவும்,
அதன் பின்னவழும் தன்
அன்பான துணையோடு
வாழ்ந்துணர்ந் தனுபவித்த
வசந்த காலங்களும்,
அழகிழந்து போனாலும்
அது தான் தன் அழகென்று
உள மகிழ்ந்து இவனும் உள்
உதைக்கச் சுமந்ததுவும்,

பெறப்பட்ட பாடும்
பின்னே வளர்ப்பதற்கு
இரவுத் தூக்கத்தை
இழந்ததுவும், அனுதினமும்
தசை வளர்வைப் பார்க்க
தவித்த மகிழ்வதுவும்,
தனக்கு மேல் வளர்ந்து
தளிர்க்க, மாப்பிளையாய்
மனக் கண்ணால் பார்த்து
மகிழ்ந்ததுவும், எல்லாமே

ஓர் குண்டு பாய்ந்து
உள் நுளைந்து சென்று விட்ட
மார்பின் வட்டத் துவாரத்துள்
மரித்துப் போய்
அர்த்த மற்ற ஒன்றாகி
அலறித் துடித்த படி
பெரும் புண்ணாய் மார்பில்
பிளந்த வட்டக் கரை மேலே
அலைந்து அதைச் சுற்றி
அனுங்கித் திரிகின்ற
ஈக்களைப் போல
இவருலகும் அதைச்சுற்றி
சாக்களை கொண்டதிலே
சரிகிறது, இதுவெல்லாம்

விசையழுத்தும் அந்த
விரல்களுக்குப் புரியாதோ
ஒரு வேளை
மூளையும் மனமதுவும்
முழுதாகத் தூங்குகிற
வேளையைப் பார்த்துத் தான்
விரல் விளையாடுகுதோ?

இன்னொன்று

வீழ்ந்த இவன் இனிமேல்
விழிக்கான் என்றறியாமல்
விளையாடித் திரிகின்ற
இவன் குழந்தை ஓரத்தில்
ஆழ்ந்த பெரு மூச்சோடு
அழுவோரைப் பார்த்த படி
அனாதை என்கின்ற
அநாதரவு வட்டத்தை
தானறியாமலேயே
தனைச் சுற்றி வரைந்த படி
எனைச் சுற்றிச் செல்கிறது
என்பதனை இப்போதில்
இதிலே எழுதிவிட
இயலவில்லை என்னாலே..

இருப்பேன் நான் இறந்து போகேன்..

வார்த்தைக் கைகளினால்
வளமாக என்காலை
சேர்த்துப் பிடித்தெந்தன்
சித்தம் மனமெல்லாம்
நீர்த்துப் போம்படியாய்
நினைவறுந்து விழும் வரைக்கும்
துணியொன்றைத் தூக்கி
துவைப்பதற்கு அடிப்பது போல்
எந்தன்பைத் தூக்கி
இயன்றவரை பலம் சேர்த்து
உறவுக் கல் நடுவே
ஓர் வெடிப்பு விழும் படியாய்
கரவுத் தோள் சுழற்றி அடி
கலங்கேன் நான்

பொத்தல்களாய் நான்
போய்விடுவேன் என்றுந்தன்
சித்தத்தில் யாரோ
சீற வைத்த விடப்பாம்பின்
நச்சுப் பற்களினால்
நானான கீரியினை
உச்சத் தந்திரத்தால்
ஓங்கி அடி, அப்போதும்
காலமெனும் மூலிகையில்
கால் பிரட்டி உருண்டு விட்டு
வேழம் போலெழுந்து நிற்பேன்
வீழ்ந்து விடேன்

என்னுடைய உயிரணுவில்
இருந்துதித்த சூரியனை
உன்னுடைய வைக்கோலுள்
ஒழித்துவைக்கப் பார்க்காதே
தன்னுடைய காலம்
தளிர்த்து வர அது எழுந்து
தான் வந்த மூலத்தைத்
தேடும், கோபத்தில்
ஏனென்று கேட்டுன்னை
இருட்டுக்குள் போட்டெரிக்கும்
உன்னுடைய கள்ளத்தை
உரிக்கும், தன் கதிரால்

என்னுடைய கவி மனசின்
இயல்பறியும், புரிகையிலே
விண்ணுயர எழுந்தெங்கும்
வியாபிக்கும் எந்தனது
இருப்பு நீரூற்றாய்
எழுந்து நிறைந்தோட
உருப் பெற்றுயிக்குமென்
ஒண் கவிகள் இறவாத
வரம்பில்லாக் கால
வானத்தை வடிவமைக்கும்

நரம்பறுந்து நாடி வீழ்ந்தன்று
நாதியற்று
வரம் தர வேண்டி
வருவாய் நீ அன்றைக்கு
பரம் இகம் தெரியாப்
பக்குவத்தில் நானிருப்பேன்
உருக்குலைந்த உறவை
ஒட்டுகின்ற மனசென்னுள்
எரிந்தவிந்து போயிருக்கும்
என்பதனால் உன் பின்னால்
திரும்பி வர மாட்டேன்
திரும்பி நீ பார்க்கின்ற
திசையெல்லாம் ஒளி சிந்தும்
திசையாவேன் ஊழிவரை
இசை சொட்டும் பாட்டாக
இருப்பேன் இறந்து விடேன்..

நமக்கான விதி நதிக்கும்..

எங்கேயோ நிகழும்
ஏதோவோர் சேர்க்கையினால்
இங்கே வந்திறங்கி
இழுபட்டு இறுதி வரை
ஓயாமல் ஓடி
ஓர் நாள் முடிகையிலே
கடந்த பாதைகளும்
கனவுகளும், நினைவுகளும்
உடன் வராமலேயே
ஒன்றுமற்றுப் பேரிழந்து
வேறொன்றாகும்
விதி ஒன்றே இப்பாரில்
வேறொன்றே இல்லாத
விதியாய், நிரந்தரமாய்
நமக்கென்றும்
நதிக்கென்றும் நல்கியது,
அப்படியே
நதிக்கான வாழ்வும்
நம் வாழும் ஒன்றே தான்

ஒரு சிறிய முளையாக
ஒவ்வோர் துளியாக
கரு அசையும் படியாக
கசிந்தூரும் வடிவாக
உரு பின்னர் எப்படியாய்
உருவாகப் போகுதென்று
தெரியாத நிலையிற் தான்
திசையின்றி அவராகத்
தெரியாத வாழ்வொன்று
தெரிவாகும், பயணங்கள்
உடல் பிரட்டி மெல்ல
உருண்டு, தவண்டோடி
மடலொத்த பாதங்கள்
மண் தொட்டுத் தத்தி
முடிவிடத்தைத் தூரத்தை
முற்றிலுமே அறியாமல்
அடியெடுத்து வைக்கும்
அறியாத பயணத்தில்,

ஓடும் வழி இதுவென்று
ஒரு போதும் இருவருமே
கோடொன்றைப் போட்டந்தக்
குறிப்பு வழி செல்வதில்லை
கட்டிக் காவிவந்த
கனவுகளின் மூட்டை எல்லாம்
முட்டி எதிர் மோதும்
முரட்டு வழித் தடைகளிலே
தட்டுப்பட் டொவ்வொன்றாய்த்
தவறி விழும்,வீழந்தவைகள்
திட்டுகளாய் அதிலேயே
தேங்கி உலர்ந்து விடும்

எஞ்சி இருப்பவற்றை
இயன்றவரை மோதாமல்
அஞ்சுவதாய்க் காட்டாமல்
அஞ்சி, தடைகளின் மேல்
பட்டும் படாமலுக்குப்
பக்குவமாய் மெதுவாக
வேகத்தைக் குறைத்து
விலத்தி, கரைகாணும்
மோகம் தருகின்ற
முனைப்பில் இன்னமுமே
தெரியாத முடிவிடத்தின்
திக்கை அறியாமல்
புரியாத பாதை வழி
போகின்றோம்,இறுதியிலே

இந்த இடத்தை நாம்
எட்டுதற்கா இவ்வளவும்
நொந்து வழி நெடுக
நொடிந்தோம் எனுமெண்ணம்
கண்ணுள் இமைப்பதற்குள்
கரைந்து நாம் வேறொன்றாய்
மண் வாழ்வை விட்டெங்கோ
மறைவோம், அதன் பின்னே
வந்த வழித்தடத்தில்
வரலாறில் எம்பெயர்கள்
எந்தப் புகழ்த் தூசாய்
எழுந்தாலும் அது எங்கள்
கண்களிலே விழுமோ
கலங்கத்தான் வைத்திடுமோ
எண்ணச் சுவாசத்தில்
ஏறிப் புரக்கடித்திடுமோ
ஒரு மண்ணும் மிஞ்சாத
உயிர் வாழ்க்கை பூமியிலே
நமக்குத்தான் மட்டுமல்ல
நதிக்கும் தான்...

இது நடக்கும்..

தமக்கென்றோர் மொழி
தமக்கென்றோர் கலாச்சாரம்
தமக்கென்றோர் வாழ்வு முறை
தன்னை வடிவமைத்து
தன் போக்கில் வாழ்கின்ற
இனக் குழுமம் ஒன்றை
இடையிட்டுப் பெருகிவந்த
இன்னோர் இனம் வந்து
இடித்துத் தன் காலுள்
கண் முன்னே போட்டுக்
கதறக் கொழுத்தையிலே
அமுக்கம் தாளாமல்
அதை எதிர்க்க அவ்வினத்தின்
உள்ளே இருந்தொருவன்
எழுதல் உலக விதி
அவனின் பின்
முழு இனம் திரண்டு
மூச்சைக் கொடுத்திடுதல்
எழப் போகும் ஓரினத்தின்
இருப்பின் வரலாறு

நீண்ட போராட்ட
நெடு வெளியில் மண்ணுக்காய்
மாண்ட வீரர்கள்
மன வலிமை ஓர்மத்தை
தூண்ட, துவளாமல்
தொடர்கையிலே அவன் பற்றி
இடைவெளியில் மனம் சோர்ந்து
இடிந்தோர் விதையற்று
வடிக்கின்ற விமர்சனங்கள்
வாய் நாற்ற வீணீர் தான்
தவிர்க்கேலாதெனினும் ஓர்
தடையல்ல, படிக்கற்கள்
இதையெல்லாம் தாண்டியவன்
எடுத்தாண்டு நகர்கையிலே
இடைவெளியில் ஏதேனும்
இடர்கள் நேர்ந்திடலாம்
விடை கூடச் சொல்லாமல்
விம்பம் மறைந்திடலாம்
உடைந்துருகிச் சிலகாலம்
ஒடுங்கிடலாம் அவன் படைகள்

ஆனால்
நாடென்றால் இது தான்
நாமிதனை அடைவதற்கு
நாடிய வழிமுறைகள்
நம்பிக்கை இவைகள் தான்
தேடி உலகெல்லாம்
திரிந்தாலும் இறுதியிற் கை
கூடும் வழி இது தான்
என்கின்ற குறிப்பெங்கள்
நாடி நரம்புகளில்
நாளாந்தம் வளர்தசையில்
ஓடித் திரிகிறது உள்ளே,
அவன் இருப்பு
இறுகிய பாறை அல்ல
இயங்காமல் இருப்பதற்கு
திறந்த குபுகுபுக்கும்
நீரூற்று, அதிற் தோய்ந்த
சிறந்த மன வேர்கள்
சிந்தனைகள் எல்லாமே
உகந்த ஓர் நாளில்
ஒன்றாகும் அன்றைக்கு
திறந்த வானிருந்து
வருவது போலொருவன்
பிறந்து வருவது போல் வருவான்
அவனடுத்த
படை நடத்திச் செல்வான்
பார்த்துணர்ந்த மாதிரி யை
உடைய வழியாலே
ஒழுங்கமைப்பான் அவனொன்றும்
வேற்றுக் கிரகத்தின்வாசியல்ல
விழிப்படைந்த
நேற்றுவரை எம்மோடு
நிமிர்ந்து தோள் கொடுத்த
நம்முள் ஒருவன் தான்
நமக்காக வாழ்பவன் தான்

காலம் அவன் பெயரைக்
கட்டமைக்கும், அவனுடைய
வானத்தில் நிற்பதற்கு
வடிவமைத்த அவன் மேகம்
கானகப் பரப்பினைக்
கடக்கும், ஓர் நாளில்
நாமெல்லாம் அதனை
நம்தேச மேகம் தான்
ஓம் என்று சொல்லி
ஒன்றாய்க் கை கோர்க்கையிலே
மேகம் திறந்து
விடியல் மழை பொழிந்தெங்கள்
தாகம் தணிந்து தளிர்க்கும்
இது நடக்கும்..

Tuesday 10 April 2012

ஈர்ப்பில் துடிக்கின்ற இயக்க விசை..

வசந்த காலத்தி்ன்
வண்ணத்தில் தோய்த்தெடுத்து
வாழ்வு ஒரு மரத்தை
வரைகிறது,அதிலடர்ந்த
பச்சை இலைகளிலும்
பரந்த கிளைகளிலும்
இச்சை ஊறுகின்ற
ஈரமன வண்ணத்தில்
உணர் கொம்புள்ள உயிர்த்
தூரிகையால் கரையாமல்
காதலும் ஓர் கூட்டைக்
கட்டியதாய் வரைகிறது
போத உணர்வுடனே
பொங்க மீண்டுமந்த
வாழ்வு வசியத்தைத் தடவி
உயிர்ப்பாக
அன்பூறும் பறவை ஒன்றை
அக் கூட்டுள் வரைகிறது

இப்படியாய்
ஒவ்வொரு வாழ்வும் தம்
உள்ளளவுக் கேற்றபடி
ஒவ்வொரு மரத்தை வரைய
உயிர்க் கூட்டை
காதலும் அம்மரத்தின்
கனதிக்கு ஏற்றபடி,
வாழ்வும் அதற்கேற்ப
பறவை ஒன்றை,
விகிதங்கள்
ஊறும் உயிரளவில்
உயர்ந்திறங்கி இருந்தாலும்
ஈர்ப்பென்ற ஒன்று
எதன் மேலோ இருப்பதனால்
இன்றும் உயிர் நீட்சி
இயங்கி தொடர்கிறது..

பனிப்புகை மனசுக்குள் படர்கிறது..

புகையாய்ப் பனி படர்ந்து
பூத்திருந்த காலையதன்
மிகையான குளிரலையில்
மேனிபட்டு வெடவெடக்க
சதையைக் குறைக்கவெனச்
சகித்தபடி மெதுவாக
நதிக்கரை ஓரத்தால்
நான் நடந்து கொண்டிருந்தேன்

அப்போதவிழந்த மொட்டின்
அங்கத் தளதளப்பில்
எப்போதும் தெவிட்டாத
இளவேனில் ரூபத்தில்
பனிப்புகையைக் கிழித்தபடி
பெளவியத்தின் உடல் மொழியில்
இனிக்கின்ற தென்னை
இளம்பாளைச் சிரிப்போடு
எனைக்கடந்து போனாள்
இங்கொருத்தி, அவளுடலைத்
தொட்ட பனிப்புகையின்
தோற்றம் அவளகன்று
விட்டுப் போயிடினும்
விலகாமல் என்முன்னே
அப்படியே அவளுவாய்
ஆகி, பார்த்ததெனை!

ஆசியப் பெண்களது
அழகான முகவெட்டில்
பூசிய செந்தளிரின்
பூரிப்பாய் முகம் மின்ன
கன்னத்தில்
தாளம்பூ நாகம் போல்
தவள்கின்ற முடிதன்னை
கோலமிடும் விரல்களினால்
கோர்த்து மேல் செருகி
மச்சாளின் கண்களெனை
மருட்டுகின்ற பார்வையினால்
உச்சித் துடிப்புணரவைத்து
உள் விழுங்கி், காந்த அலை
வீசும் இமைச் சாமரத்தை
வீசி எனை அழைத்தாள்
அதிலிருந்து
அடித்த அனற்காற்றில்
அடியோடென் நிகழ்காலம்
உடைந்து எனைத் தூக்கி
எறிய முன் சென்று
வாலிபத்தின் வசந்தத்
தொட்டிலிலே வீழ்ந்து விட்டேன்!.

பனிப்புகையாய் நிற்கின்ற
பருவப் பவித்திரமே
எனையும் ஓராளாக
எண்ணி இம் மண்ணில்
ஏறெடுத்துப் பார்த்த
இங்கிதமே முதல்ப் பெண்ணே!
நீ என்னை அழைத்த
நினைப்பில் இப்போது

விறைத்த குளிர் விலகி
வியர்கத் தொடங்குதடி
சிறை மீண்ட பறவைச்
சிறகு மன உடலில்
அடித்துப் பறந்தெழுந்து
ஆர்ப்பரிக்க, மிகக் கூடித்
துடித்த இதயத்துள்
தூலத் தீ பற்றுதடி!

பேரறிஞன் என்றாலும்
பெரும் வீரன் என்றாலும்
ஊரே போற்றுகிற
உத்தமனே என்றாலும்
நேரே அவர் முன்னால்
நிலைகுலைக்கும் அழகோடு
ஈர மொழி பேசும்
இளம் பெண் வந்து நின்றால்
மூழ்காதோ அவர்களுடை
முழுத்திறனும் அவள் கடலில்!
ஓர் நொடியேனும்
உள்ளே மனந்தடக்கி
பேர் பெருமை இல்லாத
பிண்டம் போலாகாரோ!
அழகான பெண் முகத்தின்
அசைவுக்கு ஓர் கப்பல்
விலகித் துறை விடுத்து
வேறு திசை போகுமென்றால்
பேரழகி நீ உன்
பெரு மூச்சுப் பட்டாலே
போர்க் கப்பற் தளமே
புறப்பட்டு வாராதோ!
கப்பல்களுக்கே இந்தக்
கதி என்றால் எண்ணிப்பார்
அப்பாவிக் கவிஞன் நான்
ஆடிவிட மாட்டேனா!

போதும் பனிப் பெண்ணே
போய் விடு நீ கலைந்து விடு
ஏதோ என்பாட்டில்
இருந்து விட்டுப் போகின்றேன்
இனியும் நீ போகாமல்
இப்படியே நின்றிருந்தால்
கனிந்து மனமுருகி
நானேதும் கதைத்து விட
வெள்ளைக்காரியோடும்
வெளிக்கிட்டான் என்றெந்தன்
உள்ளக் கமலம் ஊரில்
ஒப்பாரி வைப்பதற்குள்
பனியோடு பனியாகப்
படந்திடு நீ, மீண்டொரு நாள்

நாவறண்ட தாகத்தில்
நான் நடக்கும் பாதை ஒன்றில்
ஓடி வரும் நதி நீரில்
உன்னைக் கரைத்து விடு
தேடி அதற்குள் நான்
தீர்த்தமாய் உனை மட்டும்
அள்ளி என் கையில் எடுத்து
அப்படியே
ஆன்ம தாகத் தீ
அடங்கக் குடிக்கின்றேன்..

நினைவின் வாசம் நிசமாகும்..

செம்பாடாய் வெண்துகளாய்
செங்கறுப்பு நீலமதாய்
எம் பால்யக் காலத்து
மேனிகளில் இருக்கையில் நீ
எம்மோடு கொண்டிருந்த உறவை
இறக்கையிலும்
இறுதிச் சேடமதாய்
எழப்போகும் உன் நினைவை
அன்றுன்னில் வெய்யில் மண்
அடித்துத் திரிகையிலே
என்றைக்கும் நானன்று
இன்றளவுக் குணரவில்லை
ஒவ்வொரு மைல்மைலாய்
உனைப் பிரியப் பிரியத்தான்
அவ்வளவுக் கவ்வளவாய்
ஆவியில் நீ ஊறுகிறாய்

ஊரே உறங்கி உள்ள
ஓசை அற்ற ராத்திரியில்
தூரத்தில் எங்கோ
துணைதேடும் பறவையொன்றின்
பாசம் நிறைந்த மனப்
பதைபதைப்பின் குரல் போல,
மூலத்தைப் பிரிந் திடையில்
முடங்கி உள்ள நீர் நிலையில்
கூளாங்கல் எறியக்
குதிக்கின்ற நீர்த் தெறிப்பாய்,
அதிலிருந்து அகண்டு
அகண்டகண்டு விரிகின்ற
விதியின் நீர் வளைய
விரிவைப் போல்,
விசை அழுத்த
எங்கோ துப்பாக்கி வாயாற் புறப்பட்ட
அங்கம் பிளக்கவந்த குண்டு
அரங்கிப் போய்
உய்ங் கென்றென் காதை
உரசிச் செல்வது போல்,
தாகத்தில்
ஒட்டி உலர்ந்துள்ள வாய்க்கு
கிடைக்கின்ற
ஓடைக் குளிர்நீரின்
ஒரு மிடறாய், காலுரஞ்சி
குர்குர்ரென்று குளைகின்ற
பூனையென,
விபத்தொன்றில்
முழங்காலின் கீழே கால்
போனாலும் மூளைக்கு
பாதம் கடிப்பதுவாய்ப்
படுவது போல்,
இப்போதில்
உந்தன் நினைவெந்தன்
உயிருள்ளே மணக்கிறது

இன்றைக்கோ
விடியல்க் கனவோடும்
விழுப்புண் ரணத்தோடும்
அடைபட்டுக் கிடக்கின்றாய்
அன்பே, பொறுத்திரு நீ

கைகளை விலங்கினால்
கட்டினால் கால்களால்
கால்களை வெட்டியே
வீசினால் இமைகளால்
இமைகளை இழுத்துப்
புடுங்கினால் பற்களால்
பற்களை உடைத்தும்
பறத்தினால் மூச்சினால்
எப்படியேனும் எழுந்து நாம்
எம்முடை
இப்பிறப் பறுந்து செல்லுமுன்
உன்னிலே
அப்பனே நாம் எழுதுவோம்
விடுதலை..

எல்லாம் நன்மைக்கே ..

வீட்டின் விருப்பம் போல்
விளங்கத்தான் முடியவில்லை
நாட்டின் விடியலுக்கு
நம்மவர்கள் செய்கின்ற
கூட்டு முயற்சிக்கேனும்
கொடுப்போமெம் தோளை என
நன்றாகப் பட்டுணர்ந்து
நடை முறையை உள் வாங்கி
வென்றாக வேண்டும் எங்கள்
விடுதலையை என்பதற்காய்
சென்றிருந்த காலங்கள்
சில ஓட ஊரெல்லாம்

போரின் கறுத்த மேகங்கள்
பொழிந்திறுக, பொறி தாண்ட
நீருள்ளால் நெருப்பை
நிசப்தமாய் நனையாமல்
நீந்திப் போவதொத்த
நெடும்பாதை என்பதனால்
அத்தனை காலமாய் சேர்த்துவைத்த
அத்தனையும்
மொத்தமாய் தூக்கிப் போட்டுவிட்டு
வெறுங்கையாய்
செல்வதற்கு மனமின்றி நிற்கையிலே
என் அம்மா
எல்லாம் நன்மைக்கே
எழும்பு எனஅனுப்பி வைத்தார்

ஊர் விட்டுப் போன பின்பும்
உழுதல் தொடர்ந்திடவும்
நார்நாராய் நகம் நகமாய்
நம்மை அவன் கிழித்தெறிய
நாட்டை விட்டு அயல்
நாட்டுக்கு நடைப்பிணமாய்
செல்லும் விமானப் பாதையிலும்
அம்மா தான்
எல்லாம் நன்மைக்கே
ஏறென்று ஏற்றி விட்டார்

நாட்டை விட்டு விட்டு
நாம் நகர்ந்து போனாலும்
போட்டிடலாமோ எம்
பொறுப்பை எனப் புறப்படவும்
நாடி நரம்பாகப் பிரித்தெடுத்து
நம்மை அங்கும்
போட்டுள்ளே பூட்டி வைத்திருக்க
எப்படியோ
தொலைபேசித் தொடர்பெடுத்த
அம்மா பெருமூச்சோடு
அலைபோல எனையடித்த வார்த்தை
‘அப்பாடா
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தாய்
என் பெருமான்
எல்லாமே நன்மைக்கே இடியாதே’
என்பது தான்

எப்படியோ அங்கும் இழுத்துச் சுழித்தோடி
தப்பி ஒரு கண்டத்தைத் தாண்டிவிட
எல்லையிலே
அப்படியே பிடித்தென்னை
அந்தக் களைப்போடே
அடரிருட் சிறைஒன்றுள்
அடைக்க அதனாலும்
தப்பி வரும் சட்டங்களூடு
தாள் திறந்து
இப்போது பொது வெளியில்
இருந்தாலும் எனைச் சுற்றி
அந்த நிழற்படிவு
அகன்ற பெருந்தனிமை
இந்த நாட்டின் வெளிகளிலும்
இன்றுவரை
என்னை விட்டகல முடியாமல் இருக்கிறது
காலநீட்சி தந்த
களைப்பில் கலக்கத்தில்
ஏலும்வரை சொல்லி வந்த
அம்மாவும் இப்பொழுதில்
எதுவுமே எனக்குச் சொல்வதில்லை
என்றாலும்
எதிர்காலம் என்கின்ற
ஏதேனும் ஓர் கீற்றும்
இனி முன்னே எழும்பாது
என்பதனை உணர்ந்தாலும்

காலம் மிகப்பெரிய
கடப்பாரை தன்னாலே
கீலம் கீலமாய் எனைக்
கிழித்துப் பார்ப்பதெல்லாம்
ஏதோ நான் வருந்தி
எழுதுதற்கோ? என்றபடி
எனக்குள்ளே நானிப்ப
எப்பொழுதும் சொல்லுகிறேன்
எல்லாம் நன்மைக்கே
எழுதடா நீ எழுதி நட..

Friday 6 April 2012

மழையும் நினைவும் மனசளையும்..

கருக்கட்டி விட்ட
மேகங்கள் வானத்தில்
உருக் கொண்டலைய
உள்ளத்தில் நினைவென்னும்
கருவும் உள் வளர்ந்து
காலுதைக்கத் தொடங்கி விடும்

மேகம் பிரண் டிருண்டு
மிதந்திணைய நினைவலைகள்
மோகம் கொண்டுவிட்ட
முரட்டாண் யானையைப் போல்
ஏகமாய் உள்ளிரைந்து
இயலாமல் உடல் பிரட்டும்

ஏதோ ஓர் வகையான
இத இருளில் ஈரத் தீ
மோதி உரசி விட
மொய்த்தூரும் காற்றினிலே
போதி மர நிழலீரம்
பொழிய நினைவு வலி
ஆதிப் பிறப்பொன்று
அவதரிக்கப் போவதெண்ணி
வேதனையின் இன்ப
வெப்பத்தில் குளிர்ந்துருகும்

மெள்ளத் தூவான
விழுதிறங்கி மண் மணக்க
உள்ளே இருக்கின்ற
உயிர்க் குழந்தை வருவதற்காய்
வெள்ளை கறுப்பாக
விழத் தொடங்கும் நினைவுகளும்

பெருந்துளியாய் மேகம்
பிறப்பிக்கும் ஒவ்வொன்றும்
அறுந்தவிழ்ந்து மண்ணை
அடைகின்ற போதிலங்கு
தெறிக்கின்ற சின்னத்
துளிகளாய் என் நினைவு
பறந்து ஊர்க் கோடிப்
பக்கத்தில் வீழுகையில்

நீண்ட நினைவின் நோ
நேரமும் கூடி வர
மாண்டு பிறப்பது போல்
மன யோனி திறந்து விட
ஆண்டு அனுபவிக்க
அழகான கவிக் குழந்தை
தோன்றி வெண் தாளில்
துள்ளி விழுந்திடுவான்

மேகம் பெற்றெடுத்த
மென் குழந்தை மழையாலே
யோகம் பெற்றுவிட்ட நிலமும்
அதனாலே
தாக நினைவெழுந்து
தான் பெற்ற கவியாலே
போகும் வழி அறிந்த மனமும்
இப்போது
ஏகம் அகமாகி
இரண்டற்ற ஒன்றாகி
ஈக மனம் போல
ஈரலிப்பாய்க் கிடக்கிறது..

ஏழுகடல் ஏழுமலை தாண்டி..

தூக்கத்தில் வந்தென்னைத்
தொட்ட கனவுக்குள்
தூங்கி ஓர் கனவைக் காண்பதுவாய்க்
கனவொன்று

நிரை நிரையாய் மரங்கள்
நிழலைச் சொரிந்த படி
உரையும் கொப்புகளின்
உயிரோசை கிரீச் என்று
கரையும் குருவிகளின்
காந்தக் குரலோசை
புரியாவிட்டாலும்
புல்லரித்துச் சிலிர்க்கிறது
பல முறை நான் சென்று
பழகிய இடம் போல
அழகிய குளக்கரை
அப்பாலே மணற்கும்பி
மன வெளியை நிரப்புகிற
மணல் வெளிகள் வெளிதாக
ஆத்ம சரீரத்தில்
அதன் மணத்தை நுகருகிறேன்
ஆளரவம் இல்லாத
அமைதி ஒலி எங்கணுமே

ஆண்டாண்டு காலமாய்
அனுபவித்துத் திளைத்திருந்த
பூண்டு எனைப்போற்றி
பூக்க வைத்த மண்ணுக்கு
மீண்டு நான் வந்துவிட்ட
மிதப்பில், புழுகத்தில்
உங்காலும் அங்காலும் ஓடி
உடல் வேர்த்து, களைத்துப் போய்
எங்காலும் மரத்தடியில்
இருப்பமெனக் குந்தி விட
அப்படி ஓர் தூக்கம்
அதற்குள்ளும் ஓர் கனவு

இப்போது நான் பார்த்த
இதே போன்ற நிலக் காட்சி
எப்போதோ நான் கண்ட
என் பால்ய நண்பர்கள்
தென்னங் குரும்பைத்
தேரோடும்,உருட்டுகிற
சின்னப் பனை நுங்குச்
சில்லோடும் அப்படியே
அப்படியே நிஜமாக
அதே அந்தக் காலத்தில்,
அப்பன் வந்துள்ளே
சாப்பிட்டு விளையாடு
எப்போதும் எனை அதிரப்பேசாத
என் அப்பா
அப்பாலே நின்று அழைக்கின்றார்
இப்போது
கனவுக்குள் வந்த கனவென்னுள்
கலைகிறது, இன்னும்
கலையாத கனவுள்
கண் விழித்துப் பார்க்கின்றேன்
கனவின் கனவுள்ளே
கண்டவைகள் கலையாத
கனவின் கண்களுக்கு
காட்சி தர மறுக்கிறது

அப்பன் எழும்பிச்
சாப்பிட்டுப் படனப்பன்
அப்பாதான் மீண்டும்
இப்போதும் அழைக்கின்றார்..

ஓம் என்று சோம்பல்
உதறி முழிக்கின்றேன்
ஒருத்தருமே இல்லை!
உலகொன்றின் மூலைக்குள்
தரித்திரம் பிடித்துப் போய்த்
தனியே நான் கிடக்கின்றேன்

கனவுக்கு அதன் கனவு
கலைந்து விட்ட பின்னாலே
காட்சியாய் அதை மீண்டும்
காணக் கிடைக்கவில்லை
இரு கனவும் கலைந்து விட்ட
இப்போதில் நனவினிலே
ஒரு காட்சி கூட இப்ப
உயிர்ப்பாகத் தெரியவில்லை
நினைவுகள் மட்டுமே
நெடுஞ்சாணாய்க் கிடக்கிறது

காமம் கடுங்கோபம்
காழ்ப்புணர்வு காசீட்டம்
வெற்றி வேட்கை என்ற
வெறித்தன்மை படிந்துள்ள
மூளை, விழித்திருந்து
முழுதாக எம்மைத் தன்
ஆளாக நடத்தும் போதினிலே
எம்மாலே
காலங்களைக் கடக்க முடியாது
அது சோர்ந்து
கண்ணயர்ந்து போகும்
கட்டத்தில் ஆழ் மனது
விண்ணுயர எழுந்து விரிந்து காலத்தை
மண்ணளவாய்த் தன் கையுள்
மடக்கும், அதனாலே

பசிய நினைவுகளும் பாசங்கில்லாத
பாச உறவுகளும் பால்யமும்
முன்போல
கசிந்து வழிந்தோடும்
காலத்தின் காட்சிகளைக்
கண்டுணர்ந்து வாழ்ந்தெந்தன்
காலத்தைக் கடப்பதற்காய்
ஆழ் மனதை அது தோன்றும்
ஆழுறக்க நிலைதன்னை
அப்படியே கட்டி அணைத்தபடி
அசராமல்
ஏழுகடல் ஏழுமலை கடந்து
எழுந்துள்ள
காலத்தைப் பிளந்து கடக்கின்றேன்
இதை விடவும்
ஏதும் வழி தெரிந்தால்
எந்தனுக்கும்  சொல்லுங்கள்..

பல்லுள்ள போதே பறை..

எவ்வளவு சீக்கிரமாய்
இயல்கிறதோ முடிந்தளவு
அவ்வளவு சீக்கிரமாய்
எழுதி விடு, கவி மனதை

எங்கிருந்தோ வரும்
அழைப்பொன்று, மீண்டோடி
மங்கலாய்த் தெரியும்
முகமொன்று, எண்ணாமல்
நண்பன் உனை வைத
வரி ஒன்று, தலை சுற்றி
கண் முன்னால் வெண் பூச்சி
கடக்க நினைவின் மேல்
எதிர்காலம் பற்றி
ஏதேனும் ஓரெண்ணம்
எழுந்து கவி மனதை
எட்டிட முன் விரைவாக
வழிந்தோடி விழுகின்ற வரியை
வரைந்து விடு, உன் பழைய
 காதல் பற்றி ஏதும்
கரைந்துருகிக் கிறுக்கிடு முன்
மோதல் குடும்பத்துள்
முட்டி வெடித்திட முன்
விசாரணைக்கு நீ விளக்கம்
வீழ்ந்தடித்துச் சொல்லிட முன்
விளக்கத்தைக் கேட்காமல்
விவாகம் ரத்தாயிடு முன்
எதுவுமே எழுதி விட
இயலாமல் நீ முடங்கி
நான் விரும்பும் பெரியார்
நம்முடைய ஆசிரியர்
சீலை,நகைக் கடைகள்
செருப்பழகு பற்றி எல்லாம்
மாலை மாற்றிய அம்
மாதுன்னைக் கேட்ட படி
ஏதேனும் நீ எழுதித்
தொலைத்திடு முன்
இப்போதே
பக்கத்தை நிரப்பி
மறு பக்கம் தொடங்கி விடு

வறுமை உனை வளைத்து
வலைக்குள்ளே இறுக்கிடு முன்
இறுக்கம் தாங்காமல்
இதயத்தூண் தகர்ந்திட முன்
தகர்ந்து உடல் நலிந்து
தள்ளாடிப் போய்விட முன்
தள்ளாட்டம் தாங்காது
தளிர் மனது சோர்ந்திட முன்
சோர்ந்தது கண்டுந்தன்
சொந்தங்கள் விலகிட முன்
விலகிப் போய் உன்பாதை
வெறிச்சோடிப் போய்விட முன்
போய் விட்ட வாழ்வெண்ணிப்
பொறி கலங்கி வீழந்திட முன்
வீழந்து விட்டான் இவன் வாழ்வு
விழல் என்று தூற்றிட முன்

சொல்லுள்ளே வாழ்வின் சூட்சுமத்தை வாயிற்
பல்லுள்ள போதே பறை

ஆண்டுகளை ஊடறுக்கும் அவள்..

மார்மேலே சாய்ந்திருந்து
மலரிதளின் விரல்களது
கூர் நிகத்தால் மெல்லக்
கிழித்தும் கிழிக்காமல்
ஒவ்வொரு முடியாக
எண்ணுகிறேன் என்றபடி
இவ்வுலகு எனக்கீந்த
இன்பத்தின் நாட்களினை
எவ்வள வெவ்வளவோ
எனக்காகத் தந்தவள் தான்

வரச்சொன்ன நேரத்தில்
வந்திடுவாள் என்றெண்ணி
இருந்த வேலை எல்லாம்
எறிந்து விட்டுப் போய் நின்றால்
காலிரெண்டும் நோவெடுக்கக்
கால்மாற்றிக் கால்மாற்றி
ஏலாதினி என்ற நிலையினிலே கடுப்பேறி
இவளோடினி என்ன பேச்சென்று வைதபடி
இறங்கிப் போவமென நினைக்க
சிரித்தபடி
எங்கிருந்தோ வீதி கடந்தோடி வந்தெந்தன்
விரல்களுக்குள் விரல்களினைக் கோர்த்து
என் கண்ணை
இமைக்காமல் நோக்கி ஏதேதோ சொன்னபடி
சொண்டிரெண்டைக்
குவித்துச் சுழித்திடவும்
சுர் என்ற கோபமெல்லாம்
தணிந்திறங்கிச் சுழன்றவளின்
முன்விழுந்து சரணடைந்து
கர்வத்தை இழந்து
கால் பிடிக்க வைத்தவள் தான்

வெற்றி என நினைத்த
விளையாட்டில் தோற்றுவிட்டு
குற்றம் செய்தவன் போல்
குனிந்தடங்கித் தலை கவிழ்ந்து
பெற்றவர்கள் சோதரங்கள் எத்தனையோ
மற்றுமெந்தன்
உற்ற நண்பர்கள் சூந்து நின்று
எந்தனுக்கு
எத்தனையோ ஆறுதல் சொல்லியும்
முடியாமல்
இற்று நானுடைந்து போயிருந்த வேளையிலே
சற்றுமெதிர் பாராமல் வந்துள்ளே
என்னுடைய
பிடரிமுடி தன்னுள் விரலோடி
சொண்டீரம்
காதின் கரை நுனியைக் கவ்வ
மெதுவாக
விடடா எழுந்திடடா
வா வெளியே போவமென
அடடா! ஓர் மொழியிற் சொன்னாள்
அப்பொழுதில்
இன்னொருக்கால் தோற்றால்
என்னவென என் மனது
தன் நிலை விட்டுத் தவிப்பதற்கு
வைத்தவள் தான்

சொன்னதெல்லாம் செய்து
சுகம் வளர்த்து விட்டவள் தான்
சொல்லாத பல செய்தும்
சுழன்றாட வைத்தவள் தான்
என்னுடலின் வாசம்
இதுவென்று இழுத்துள்ளே
தன்னுடலின் வாசச்
சுவையோடு தந்தவள் தான்
என்னுள்ளும் கவி மனது
இருக்குதென்று நானுணர
பன்னூலாய் நான் படித்த
பாட்டாக இருந்தவள் தான்

நீண்ட வழி நடந்து
நிறை காட்டின் அடர்வுக்குள்
பூண்டான திசைப்புல்லில்
மிதித்தவர்கள் எப்போதும்
மீண்டுவர இயலாமல்
மீண்டும் மீண்டுமந்த திசைப்
பூண்டினைச் சுற்றித்
திரிவது போலென் மனசை
ஆண்டு தன் கையுள்
அடக்கி வைத்திருந்தவள் தான்

இப்படியே
எப்படியோ எல்லாம்
எனையாக்கி வைத்து விட்டு
தப்பான காலப் படகில் காலூன்றி
எப்படியும் வருவேன்
இரு என்று சொல்லி விட்டு
போகின்றேன் என்றன்று
புறப்பட்டுப் போனவள் தான்

இன்றைக்கும்
ஏதோ விதி ஒன்றால்
எனை வழியில் சந்தித்து
என்னோடு சேர்ந்து நடந்தவர்கள்
இடைவெளியில்
காரணங்கள் ஏதுமற்ற
காரணத்தைச் சொன்னபடி
கை காட்டி விலகிக் கடக்கையிலே
அவள் அன்று

போகின்ற போதில் என்
புறக் கண்ணில் உடற் தோற்றம்
பாகம் பாகமாக மறைந்திடவும்
பொறி கலங்கி இதயத் தூண்
அறுத்தெறிந்த பல்லி
வாலாக ஆகி எந்தன்
அடி வயிற்றுள் அவள் இதயம்
அதிர்ந்தது போல் இன்றைக்கும்
ஆண்டுகளை ஊடறுத்து
அவள் நினைவு மீண்டுயிர்த்து
தோண்டி அத் துடிப்பை
துடி துடிக்க வைக்கிறது..

Sunday 1 April 2012

நேரம் உறைகின்ற காலம்..

இரவென்ற ஓர் நிலையும்
இருட்டறுந்து கிழிந்து விழும்
ஒளி வண்ணம் போற் தோன்றும்
ஓர் பகலும் அது படர்ந்து
ஆயிரம் சந்ததியைக் கடந்தும்
ஆழ் மனதில் அழியாமற் படிந்து
மயக்கம் வழிகின்ற
மாலை சாய்ந்து விழும்
மருள் நிலையும் என் வாழ்வின்
காலக் கணக்கின் கண்களுக்கு
எந்த விதக்
காட்சிகளும் அதன்
கலங்கல் நிறமுமற்று
சாச் சொரியும் போது விழும்
சாயை மட்டும் தெரிகிறது

நிமிடங்கள் அறுந்து
மணி நாட்கள் அறுந்தறுந்து
மாதம், வருடங்கள் அறுந்து விழ
என் வாழ்வு
நேரங்கள் அற்ற
நிலை உறைந்து போயுள்ள
காலங்கள் நோக்கிக் கடக்கிறது

ஏனெனிலோ
உணவுண்ண வருவாயா
உறங்கி எழுந்தாயா
ஏனிரெண்டு நாளாக
எழும்பாமல் படுத்திருந்தாய்
நாளைக்குப் பின்னேரம்
நாலரைக்கு மேலாக
நானுன்னை வந்து பார்க்கட்டா
இல்லையெனில்
நீ என்னைப் பார்க்க வருவாயா
இப்படியாய்
எனை நோக்கிச் சும்மா
ஏதேனும் ஓர் வார்த்தை
ஏறெடுத்தும் கேட்பதற்கு
இங்கே யாருமில்லை

எல்லோரும் தூங்குகையில்
என் கண்கள் விழிக்கிறது
அவர் விழித்தெழுகையிலே
அயர்ந்துறங்கிப் போகின்றேன்
உணவுண்ணல் மற்றும்
எல்லாமே இப்படித் தான்
என்னோடிருக்கின்ற மனிதர்கள்
இயங்குகிற இயல்பு வழமைக்கு
எதிர்மாறாய் என் போக்கு
தலை கீழாய் நடந்து செல்கிறது

தினந்தினமும்
அடித்துடைந்த கால்கள்
அணு அணுவாய்க் கொதித்தாலும்
உடைத்துத் தெறிப்பது போல்
உள் நெஞ்சுள் வலித்தாலும்
எனக்கிங்கு துணையாக நானே தான்
அதனாலே
எனைச் சுற்றி இருப்பவைகள்
எனக்குத் தெரிவதில்லை
காலக் கணக்கெல்லாம்
மனக் கண்ணில் புரிவதில்லை
காட்டில் வளர்கின்ற மரம் போல
என் வாழ்க்கை
நாட்டில் நடந்து திரிகிறது

இப்படியே
எல்லைகள் ஏதுமற்று
இயல்பாய்க் கிடக்கின்ற
பிரபஞ்சப் பெருவெளியின்
பெயரற்ற வீதிகளில்
மனிதர்கள் தங்களது
மனம் கொண்டு போட்டிருக்கும்
புறத் தடையை எந்தன்
புறங்கையால்த் தட்டி விட்டு
நேரம் காலமற்ற
நிகழ்கால வெளி நெடுக
மூளை மனம் நின்றுவிடக்
கால் நடந்து செல்கிறது...

தப்படா இந்தப் பிறப்பு..

பிரிவுத் தீயின் வெறுப்புத் தழலில்
பிறக்கும் விரக்தித் தணற்ப் படுக்கை

உடலாய் ஆகி உயிரைக் கருக்கும்
உயிரின் உள்ளம் உருகி விழும்

மழலைப் பேச்சை மயக்கும் சிரிப்பை
மைல் பல தாண்டி வைத்து விட்டு

உழலும் வாழ்வில் ஓர்மம் சிதற
உறவின் பாசம் ஓங்கி அழும்

எப்படா வருவாய் என்றவள் கேட்ட
இமைப்பில் நெற்றிப் பொட்டுடைந்து

ஆக்ஞை திறந்து அன்பின் சுனையால்
ஆவி வழிந்து பறந்து சென்று

என்பை உருக்கும் படியாய் இறுக்கி
இயன்ற வரைக்கும் உயிர் அணைக்கும்

இங்கே உடலோ அந்தச் சுகத்தை
எண்ணிப் பிதற்றி மனம் பிறழ்ந்து

தற்கொலை செய்யவும் எண்ணும் ஆனால்
தளிரின் சிரிப்புத் தடுத்து விடும்

எப்படா அந்தச் சிரிப்பும் அணைப்பும்
எந்தனைச் சேரும் சொல் முருகா!

தப்படா இந்தப் பிறப்பு மேலும்
தவறடா இத்தகை வாழ்வு எங்களை

எப்படா சேர்ப்பாய் என்னுயிர் தன்னை
எப்படா மீட்பாய் வேலா..

காலம் ஆகினீர்.. - பேராசிரியர் கா.சிவத்தம்பி

யோகர் எனும் சித்தன்
யூகித்துணர்ந் துரைத்த
பாகுத் தமிழ் மொழியின்
பதிவே!  கால நடை
ஆகி அதற்கேற்ப
அசைந்தோடிச் சூசகமாய்
சொல்லும் வகை உணர்ந்த
சுவையே! தமிழ்ச் சிந்தனையை
ஆங்கிலத்தில் அசைபோடும்
அறிஞ! நாம் அறிய
அற்றைத் தமிழிருந்து
அருங்கலைச் சொற்கள் வரை
இற்றைப் படுத்துகின்ற
எமதிருப்பே! எமை விட்டு
வானேகிப் போய் விட்டீர்
வரலாறாய், எம் பாடு
தேனில்லா அடையாகத்
தேம்பிக் குமைகிறது

என் வாழ்வுக் காலத்துள்
இனி என்றும் உங்களைப் போல்
அன்புளமும் அறிவும்
அரவணைப்பும் நிறைந்தூறும்
எந்த ஒரு மனிதனையும்
இனிக் காண முடியாது
நீங்கள் போய் விட்ட
நெடு வெளியை நிரப்புதற்கு
நாங்கள் அறிந்த வரை
நம்மினத்தில் யாருமில்லை
உங்கள் காலத்தில்
உமைத் தெரிந்து உம்மோடு
எங்களுக்கும் வாழக் கிடைத்ததென்ற
ஓர் நிறைவே
உள்ளே மூச்செங்கும் எழுகிறது
பிதாமகரே..

எங்கள் செல் நெறியை எமக்கான வழித் தெளிவை
உங்களது உரையாலும் உணர்ந்தோம் - எங்களது
வரலாற்றின் மைல் கல்லே வாழ்வீர்  நும் புகழை
உரையாற்றும் எங்கள் உலகு..