Sunday 2 March 2014

கண்ணம்மா..

எந்தை நிலம் நீயெனக்கு
ஏங்கும் மனம் நானுனக்கு
வந்த வழி நீயெனக்கு
வரும் விடியல் நானுனக்கு
எந்தநிலை தோன்றிடினும்
என்னுளெழும் வீரியமே
சொந்த மண்ணின் வாழ்கனவே
சுதந்திரமே கண்ணம்மா

கண்ணின்மணி நீயெனக்கு
காட்சியடி நானுனக்கு
ஜென்மவரம் நீயெனக்கு
ஜீவிதமாய் நானுனக்கு
மண்ணின் மணம் போல எந்தன்
மார்புளெழும் வாசனையே
எண்ணங்களின் ஊற்றுயிரே
என்னிருப்பே கண்ணம்மா

விந்தினணு நீயெனக்கு
விளையும் கரு நானுனக்கு
சந்தமொழி நீயெனக்கு
சமர்ப்பரணி நானுனக்கு
முந்தையொரு நாளிலெந்தன்
முதுசமென வாழ்ந்தவளே
விந்தையொன்று ஆகிடுமா?
விடுதலையே கண்ணம்மா..