Tuesday 16 July 2013

உயிர் காவும் பாடல்..

தலையணையில் மெல்லத்
தலை திருப்பக் காதோரம்
இலை வருடிச் செல்வது போல்
இதமான பாடலொன்று

இங்கேயிதை ஒலிபரப்ப
எவருமில்லை, வாய்ப்புமில்லை
எங்கிருந்தோ சாளரத்தால்
இறங்கி வரும் காற்றோடு
கால், இடுப்பு, தோள் தடவிக்
காதோரம் வழிகிறது,

கிளுவங்குளை நசிந்த
மணமும், நான் விரும்பும்
ஆட்டுப்பால் வாசனையும்
அதனோடு,

நினைவுக்கு வாசமுண்டோ?
நிசந்தானோ!, ஊரில் நான்
வீட்டுப் படியின் மேல்
இருந்தபடி வானொலியில்
கேட்ட பாடலும்
கிடந்துருண்ட வாசனையும்
நாட்டை வீட்டு வேறு ஒரு
நாட்டுக்கு, இடையினிலே
இத்துணை ஆண்டுகளும் தாண்டி,
இருக்குமோ! ஒருவேளை
சித்தம் கலங்கி உள்ளே
சிதைந்து காலமெனும்
வித்தைகளைக் கடந்து
வெளியில் மிதக்கிறதோ!

ஒருக்களித்து மறுபக்கம்
உடல் பிரட்டிப் படுக்கின்றேன்
வருகிறது மீண்டும் அதே பாடல்
வாசனையும், இப்போது
ஆளைச் சுழித்திழுக்கும்
ஆழிபோல் விழியிரெண்டும்
குழந்தையாய் என்னைக்
குழைய வைத்த உதடுகளும்
இரெட்டை நாடியும்
எழுந்திறங்கும் மார்பெடுப்பும்
காட்சியாய் இதனோடு
கலந்தபடி, எனை மறந்து
கொடுப்புக்குள் சிரித்தபடி
குப்புறப் படுக்கின்றேன்
உள்ளே நானில்லை
உடல் மட்டும் கிடக்கிறது
அள்ளியெனை சுமந்து
செல்கிறது அப்பாடல்

கூடு விட்டுக் கூட்டுக்கு
சித்தரன்று புகுந்தாராம்
நாடு விட்டு நாட்டுக்குள்
நானுமிங்கே புகுகின்றேன்
பாடல் காலத்தின்
பாதைகளைத் திறந்து விட
ஓடி நான் வந்து விட்டேன்
உயிர் வாழும் தெருவிற்கே..























Saturday 6 July 2013

உனக்கு நான் அல்லது எனக்கு நீ

எதுவுமே புரிந்திருக்கவில்லை
எல்லோரும் கூடி அழ
அவனும் சேர்ந்தழுதான்

கண்களை இறுக்கமாக மூடி
ஆடாமல் அசையாமல்
பெட்டிக்குள் அடங்கிப் போய்,
எப்படி அவனிதனை எடுத்துக்கொள்வான்?

முன்னைய நாட்களைப் போலவே
தன்னை
கண்ணாமூச்சியின் பின்
கட்டி அணைப்பாயென்றெண்ணுவானா?
அடிக்கடி ஓடி வந்து
உற்றுப் பார்க்கிறான் உன் முகத்தை
சிரிக்கிறான், அழுகிறான், ஓடித்திரிகிறான்

ஊர் அவனைப் பார்த்தே
ஒப்பாரி வைக்கிறது
ஒன்றும் புரியவில்லை அவனுக்கு
உடைந்தழும் தாயின் சூட்டில் ஒதுங்கி
பிதுங்க முழிக்கிறான்

சுவரில்
நீ தொங்கும் காரணத்தை
அவனறிகின்ற காலத்தில்
இளைத்துப் போனதொரு
மங்கிய கனவாய்
அவனுக்கு நீ, அவ்வளவே!

விடுதலைக்காக நானும்
வேலைக்காக நீயுமாய்
நீட்டிய துப்பாக்கி
உமிழ்ந்த குண்டுகள்
எம்மைத் துளையிட்டு
வீழ்த்திவிட்ட பின்னர்
இப்படியாகத்தான்
என் வீட்டில் என் மகனும்
உன் வீட்டில் உன் மகனும்..
-
விம்மி அழுவது
வீரனுக்கழகல்ல எனினும்
அம்மி அல்லடா
ஆழ் மனசு..