விடியலின் முதல் ஒளியை
முத்தமிட்ட மலரிதழில் இருந்து
மெதுவாய் அவிழ்ந்துருளும்
நீர்த்துளியின் அழகிய காட்சியாய்
தென்னை இளம்பாளைச் சிரிப்போடு
உன் முகம் எனக்கின்னும்
நினைவிருக்கிறது
பழகும் காலத்தில்
எம்மைத் தாண்டிச் சென்ற
ஏதோ ஒரு வாசனை
எதிர்பாராமல் இன்று
நாசியில் படுகிறபோது
கடந்த காலம்
விம்மியபடி விம்பமாய்
முன்னே எழுகிறது
களத்தில் கேட்ட கானங்களை
புலத்தில் கேட்கிற போது
காட்டு மணம் அறைமுழுதும்
நிறைவதில்லையா
அன்றொரு மாலை
கால் நனைக்கவுமென
கடற்கரை போயிருந்த போதில்
குருதிச் சிவப்பாய்
கடலுள் சூரியன் இறங்கும் கணங்களில்
கடந்து கொண்டிருந்த படகும்
பறந்து கொண்டிருந்த பறவையும்
சூரிய வட்டத்துள் பொருந்திவிட
உலகின் அந்த அழகிய காட்சியில்
நாமெம்மை மறந்து
கைகளை இறுகப் பிணைத்தோம்
அட்லாண்டிக் கடற்கரையில்
அப்படி ஒரு காட்சியை
இன்றைய நாளில்
காண நேர்ந்த பொழுது
காற்றில் பிசைந்த கையில்
என்றோ பிணைத்த கையின்
கணச்சூடு
கடலும் மலையும், பாம்பாக
இடையில் நீண்டு கிடந்தாலும்
இங்கிருந்து நான் பார்க்கும்
அதே விண்மீனைத் தான்
அங்கிருந்து நீயும் காண்கிறாய்
மனவான் ஒன்று தான்
அதில் மின்னியபடி
எண்ணற்ற நினைவுகளும்
அன்பெனும் நித்திய சந்திரனும்..