Thursday 15 May 2014

செத்துயிர்த்துச் சாதல்..

ஒதுக்குப் புறமாயேனும்
ஒரு பூ?
இதற்குப் பின்னணியில் எவருள்ளார்?
எச்சரிக்கை.

என்பிள்ளை, என் அப்பா
என் குடும்பம், என் நண்பன்
ஒற்றைச் சுடரேற்ற
ஓர் வாய்ப்பு?
புரட்சி உருவாக்கும் புதுயுக்தி
பிடித்தடைப்போம்

விம்மல்?
முடியாது
விசும்பல்?
கூடாது
துக்கம் தொண்டையோடிருக்கட்டும்

ஒன்றாக வாழ்ந்தவரை எண்ணி
ஒருதுளி கண்ணீர்?
விழியிருந்து துழியவிழ்ந்து விழுவதா!
விபரீதம்
அண்ணாந்து கண்களுக்குள்
அடக்கு
கலங்கிய கண்கள் கூடக்
கண்காணிக்கப்படுகின்றன

பெருமூச்சேனும்?
பின்னாளில் பெருத்துப் புயலாகும்
ஆபத்து
மெதுவாக இன்னும் மெதுவாக

இப்படியே அழுத்தழுத்தி
எப்படியுமும் கரத்தில்
துப்பாக்கி வடிவொன்றைத்
தொங்க வைப்போம்
அது வெடிக்கும்
சத்தமொன்று போதாதா உலகுக்கு
பிறகென்ன
அடுத்த பத்தாண்டும் அரசியலில்
நாம் வாழ்வோம்..

No comments:

Post a Comment