Tuesday 15 May 2012

மகனெழுதும் கவிதை மனத்துள்..

என்னை நீ தூக்கி வைத்திருக்கும் நிழற்படத்தில்
உன்னோடு ஒரு காலம் இருந்திருக்கேன் என மகிழ்வேன்

ஆறாம் மாச ஊசி எனக்கடித்த நாளன்று
கூறாமல் போனாயாம் எங்கேயோ, பின்னருனை

கடல் தாண்டி வந்தேதோ கட்டட இருட்டறையின்
கம்பிகளின் பின்னால் நான் கண்ட நினைவிருக்கு

எட்டி எனைத் தொட்டுப் பார்க்க நீ எத்தனித்தாய்
முட்டி விடும் என நானும் முயன்று கை நீட்ட

தட்டி விட்டான் ஒருவன் தள்ளியுனை உதைத்து விட்டான்
பட்டமரம் போல வீழ்ந்தாய் அம்மாவும்

கட்டி எனைப்பிடித்துக் கண்கலங்க, புறப்பட்டோம்
குட்டி என நீ கூப்பிட்ட குரலின்னும்

தட்டுப்பட்டபடி கிடக்குதுள்ளே, இன்றைக்கு
எட்டாத தூரத்தில் எங்கேயோ உள்ளாயாம்

கணணித் திரையில் நீ கண் சிவந்தபடி இப்போ
அணைக்கக் கை நீட்டி அழைப்பாய் நானும் தான்

காற்றில் வெறுங்கையைக் கட்டி எம்மை நாம்
தேற்றிக் கொள்வதிப்போ தெரிகிறது, அப்பா நீ

ஊட்டி விடுவாய் உங்கிருந்து, ஆக்காட்டி
நீட்டுவேன் என் வாயை நீயும் தான் ஆவென்பாய்

ஆளாளை ஏமாற்றல் அறிந்தும் வெறும் வாயை
அசைபோட்டு மென்றெம்முள் ஆறுதல் கொள்ளுகிறோம்

பெற்றோர் சந்திப்பு என்றால் பள்ளியிலே
மற்றக் குழந்தைகட்குத் தந்தை தாய் வந்திருப்பார்

எனக்கு மட்டுமிங்கே எப்போதும் அம்மா தான்
மனம் கனத்து நானுன்னை வாவென்று அடம் பிடித்தால்

இனிப்புப் பை அனுப்பி ஏமாற்றி விடுகிறாய் நீ
எனக்கின்னும் விளங்காததிது தான் எங்கேயோ

இருக்கின்றாய் இருந்தும் ஏன் வீட்டை வருவதற்கு
மறுக்கின்றாய் என்ற மர்மம் தான்? விரைவாகப்

பார்ப்போமெனத் தினமும் சொல்லுகின்ற அம்மாவின்
நீர்த்தின்னும் போகாத நெடுநாள் வார்த்தைகளைப்

போர்த்தபடி நானுறங்கிப் போகின்றேன் என்றைக்கோ
சேர்வாய் எனை என்னும் சிறு கனவின் தாலாட்டில்...

3 comments:

  1. மிக்க நன்றி நீங்கள் சொன்னவாறே முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  2. போர்த்தபடி நானுறங்கிப் போகின்றேன் என்றைக்கோ
    சேர்வாய் எனை என்னும் சிறு கனவின் தாலாட்டில்...

    ReplyDelete