Thursday 16 February 2012

காத்திருத்தும் கிட்டாக்கனவு..

காற்தசை சிதறிக்
கட்டடத்தின் மேற்கிடக்க,
நாற்புறமும் குருதி
நாளங்கள் கிழிந்தோட
நெஞ்சு விலாப்பக்கம்
நிணத்துண்டாய் நிலைமாற
அஞ்சாத கையிரெண்டும்
அறுந்து விழ, இலக்கின் முன்

தலை ஒன்று தனியாகத்
’தலை நிமிர்ந்து கிடக்கிறது’
முலை இடித்து நீ குடித்த
வாய்ப்பக்கம் வெடித்தபடி

உள்ளே பல்லில்லை வெறும் முரசாய்
ஓ குழந்தாய்!
கொள்ளிக் கட்டைகளாய்க்
கொட்டிண்டு கிடக்கின்றாய்

தன்னை இழந்து
தவமிருந்து உள்வாங்கி
என்னென்ன நினைவெல்லாம்
நினைத்தபடி சுமந்திருந்து

உனக்காச் சாப்பிட்டு
உனக்காக முலை பெருத்து
உனக்காக உடையவனை
ஒதுக்கி விட்டும், பலவேளை
தனக்கான விருப்பங்கள்
தவிர்த்திருந்து, கண்விழித்து
உனக்காகப் பார்த்திருப்பே
உயிர் வாழ்க்கை என்றிருப்பாள்

எண்ணைக்குள் தோய்த்தெடுத்து
இழுத்திழுத்துப் பிடித்துவைத்த
சின்னக் கூர் மூக்கு,
சிரட்டைபோல் உருண்டதலை
ஆசையில அவள் நுள்ளும்
சதை பிடித்த பின் பக்கம்
கூசி நீ சிரிக்க
விரல் தடவும் கீழ் வயிறு

எல்லாம் வளர்ந்து
எடுப்பான ஆம்பிளையாய்
நல்ல ஒரு மாப்பிளையாய்
அவள் பார்க்க நீ போனாய்..

அடையாளம் தெரியாமல்
நீ சிதறிப்போயிருக்க
கடைவாயிற் பூவரசு
வைரவரில் பூ வைத்து
உன்னை எதிர் பார்த்தபடி
உயிர் பிடித்துக் காத்திருப்பாள்
மண்ணும் தற்கொடையை
மனசுக்குள் அஞ்சலிக்கும்..


No comments:

Post a Comment