Wednesday 12 September 2012

போதாத காலத்தைப் புறந்தள்ளல்..


இத்தனை காலமாய்
இடர் கடந்து நடந்து வந்த
அத்தனை வலிகளையும்
அலட்சியமாய் மேம் போக்காய்
அதுக்கென்ன உன்னை
ஆர் கேட்டார் எனச் சொல்லி
ஒதுக்கி ஓர் புறத்தில் தள்ளுங்கள்
ஒடியேன் நான்

எப்படித்தான் சாகாமல்
இதைத் தாண்டி வந்தீர்கள்
தப்பாமற் சாதலே தர்மம்
தவறி வந்து
எப்படியும் மீண்டு எழுவமென்றால்
ஏற்கேலா, முடியாது
அப்படியே நெருஞ்சி முள்ளை
அள்ளி வார்த்தைகளால்
அறையுங்கள் முகத்தில்
அசையேன் நான்

நுனி நாக்கில் ஆங்கிலத்தை
நொடிப்பதற்குத் தெரியாத
உனையும் ஓராளாக ஒண்ணோம் நாம்
ஒதுங்கிச் செல்
ஆண்டுகளாய் நாம் அணிந்த
ஆடைகள் தான் அதற்கென்ன?
அகதி தானே நீ அணி, புத்தாடை
வேண்டவும் வழியில்லை
வீணாய் ஏன் வீறாப்பு? கொதிக்கின்ற
தன் மானத்தைத் தட்டிப் பாருங்கள்
தளரேன் நான்

மீண்டுவர இயலாத
மிகக் கொடுமைச் சிறைகளினைத்
தாண்டி இங்கே வந்ததெல்லாம்
தளர்ந்துடைந்து போக அல்ல
ஏதோ கடமையின்னும் இருப்பது தான்
அதுவரையில்
போதாத காலத்தைப்
பொறுப்புணர்ந்து கடப்பேன் நான்

எதற்காக என் பயணம்
இழுத்தோடி வந்ததுவோ
எதற்காக இத்தனை பேர்
இவ்வளவும் வந்தாரோ
அதற்கான புள்ளியினை
அடையும் வரை என்னை விட்டு
சிதைந்துடைந்து போகாதே
சீவனே என் சிவனே..

No comments:

Post a Comment