Tuesday 6 March 2012

கால வல்லரசின் கையில்..

உன் மத்தம் தலைக்கேறி
உயிர் கொதித்து உடல் முழுதும்
என்னென்று சொல்லேலா
இதமெழவும் கவி விந்து
வீசிப் பறக்கும்
விதிக் காலவெளியினிலே
ஓசைப் படாமல் ஒன்று மட்டும்
உள்ளிறங்கி
கால வாசகப் பெண்
கருவினிலே உரு ஆகும்

மற்றைவைகள்
கால் வழிந்தும் கழுவுண்டும்
போகிறது ஆனாலோ
அவைக்கும் உயிருளது
ஆயினும் ஏன் காலப் பெண்
தெரிந்தெடுத்துச் சிலவற்றைச்
சுமக்கிறது மற்றவற்றில்
உயிர்த் துடிப்புகண்டும்
உள்ளெடுத்துச் சுமந்துயர்த்தி
வியப்பாக வெளியுலகில்
காட்டாமல் வெறுக்கிறது

தன்னிடத்தில்
முந்தி வந்து முட்டியுள்ளே
பாய்ந்தவை தான் ஊழியதன்
அந்தம் வரை செல்லும்
அசைக்கேலா உயர்வென்றும்
மற்றவைகள்
ஆயிரத்தில் ஒன்றாக
அவரவரின் விருப்புக்கு
பாயிரமாய்த் தெரியும் என்கிறதே..
அவற்றுள்ளும்
காலம் தான் பெரிதாய்க்
காட்டுகிற கவியைவிட
காத்திரமாய்ப் பல இருக்கு
ஆனாலும் ஏன் காலம்
ஒன்றிரெண்டை மட்டும்
உயர்த்திப் பிடிக்கிறது?

ஆழ்ந்த பொருட் சுவையும்
அழகான நுண்ணுணர்வும்
சீர்ந்த ஓசைத் தெளிவும்
கூருணர்வும் சேர்ந்தபடி
தேர்ந்த கவிதந்த
எத்தனையோ பேர் இன்று
மெல்லப் பின்னாலே
மிதந்து வந்த விந்தைப் போல்
அள்ளிக் கழுவுண்டு போய் விட்டார்
சுழியன்கள்
அந்தளவோ இல்லை
அதன் கீழோ எழுதிடினும்
உலகில் கவியாகத் திரிகின்றார்
ஆயின் அரசியலில்
கெட்டித்தனமுள்ள கவி விந்தா
இவ்வுலகை
தட்டித் தன் முகத்தைக் காட்டும்
இல்லையெனில்

கால வல்லரசு
திட்டமிட்டுத் தன்னுடைய
கோளப் பிராந்திய நலன்களுக்கு ஏற்றபடி
ஆளைத் தேர்ந்தெடுத்து
அடையாளம் காட்டிடுமோ..?

ஐநூறாய் ஆயிரமாய்க்
கவிஞர்கள் உலகிருந்தும்
பத்துப் பதினைந்தே
உலகத்தின் கண் முன்னே
உயரக் கொடியாகப் பறக்கின்றார்
பின்னுள்ள
ஆயிரத்துள் இருக்கும் ஐம்பது பேர்
முன்னுள்ள
பத்துப் பதினைந்தின் தோளொக்கும்
ஆனாலும்
கல்லில் பொறித்தது போல்
காலம் தான் சில பேரை
நில் என்று முன்னே
நிறுத்தி வைத்துப் போகிறது

வில்லங்கமான
கால வில்லின் நாணொலியில்
சொல்லங்கமாகச்
சுடர் மிளிருமிடம் பிடிக்க
பல்லங்கமாகப் பிரிந்து செலும்
பாதைகளில்
சொல்லுங்கள் எது தான்
சோதி மிக்க வழி என்று.?

No comments:

Post a Comment