Sunday 12 July 2020

இவன் சாகான்..

பட்டியலுள் அகப்பட்டு
பரிதாபமாக்கப்படும்
முட்டாளாய் இருக்க அவன் விரும்பவில்லை
அவன் படைப்பு
அண்ணாந்து பார்த்துச் சும்மா
அலங்கரிக்கப் பட்டதல்ல
மண்ணில் புரண்டெழுந்து
மார்கொடுத்து முடிந்தவரை
தன்னைக் கொடுத்து
தான் எரித்து வனைந்ததடா

உண்மையும் உயிர்ச் செறிவும்
ஒருங்குவரும் ஓசைகளும்
என்ன,அதை எப்படிப் படிப்பதென்றே
இன்னும் அறியார் இந்த
இடிமாட்டு விமர்சகர்கள்

பாசாங்கறியாத
பட்டவனின் பாட்டுக்கு
படிமந்தெரியாது
பட்டதொன்றே தெரியுமடா
வீசுங்காலம் அவன்
வேண்டியதை விடுதலையின்
பேசுபொருளாக்கும் அன்றும்
விண்ணாண விமர்சனங்கள்
தூசாய்க் கூட எங்கும்
தொங்காது அறிந்திடுக..


No comments:

Post a Comment