Tuesday 20 March 2018

எதிரிக்கான மொழி..

கையறுநிலைக்கும் கையறுந்து
சிறையை நோக்கி
குழந்தை நடக்க தொடங்கிய போது
நிலம்
எப்படிப் பிளக்காமல் இருந்தது..?

அடி வயிறெரிந்த
அப்பாவித்தனத்தின் வெம்மை
கண்களில் இருந்து அவிழ்ந்து
நிலத்தில் உருண்டபோது
எரிமலையொன்று அவ்விடத்தில்
எழாமல் இருந்ததது எங்ஙனம்..?

அவ்வாறாய் நீ எண்ணுவையாகின்
அவிந்த எரிந்தமலை இல்லாத் தெருவே
எங்கள் மண்ணில் இல்லையே நண்ப

எத்தனை ஆண்டாய்
எத்தனை தடவைகள்
எத்தனை குழந்தைகள்
எத்தனை பெற்றோர்
இப்படி நடந்து களைத்துப் போயினர்..?
ஆயின்
என்னதான் முடிவு என்கிறாய்..?

எமது மண்ணின் அரசியற் தன்மைக்கு
வேட்டி அரசியல் என்பது
அதிகம் போனால்
இழவு வீட்டில் விளக்கு திரிக்கு
கிழிக்க பயனுறும்,
விளங்காதென்பதை அறிந்தே ஆயுதம்
துலங்கி மறைந்தது.
அதுவும் மறைந்ததா அடுத்தது என்ன..?

ஆயுதம் வரைந்த தேசத்தின் மாதிரி
ஆயுதம் வரைந்த அறிவின் நிச வழி
ஆயிற்று, எங்கள் மரபணு ஆயிற்று
ஆயுதம் என்பது ஆயுதம் அல்ல
ஆயுதம் என்பதும் அரசியல் தானே

ஆகையால் நான் சொல்வது எதுவெனில்

எந்த மொழியைக் கேட்டால்
எதிரியின் செவிக்கு
கேட்கும் சக்தி கிடைக்குமோ,
எந்த மொழியைக் கேட்டால் எம்மவர்
சொந்த மண்ணின் சூட்டை உணர்வரோ,
எந்த மொழியில் பலமாய் இருந்தால்
உலகை இயக்குவோர்
வந்து எங்கள் வாசலில் நிற்பரோ
அந்த மொழியே அடுத்தும் வழியென
அறிவோமாயினும் அவற்றுள் இருந்து
விட்ட தவறுகள் திருத்தி விரைவில்
விழித்துக் கொள்ள மறந்தோமென்றால்
நடக்கப் போகும் நாசம் பார்க்குமுன்
இன்றே செத்துப் போவது நன்று..


No comments:

Post a Comment